Wednesday, July 22, 2009

அடிமைவாழ்வே ஆனந்தமடா

இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.

உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.

1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.

நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘ரஹற்ங்ழ் நட்ங்க்’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.

இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?

1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.

காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத் தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?

இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.

அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது. அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள். அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.

"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.

இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.

பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.

பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, 'அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.

நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணபலமும், செல்வாக்கும் பெருகியிருக்கலாம், ஐ.சி.சி.யின் முக்கிய முடிவுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்கு அதிகமிருப்பதாக தற்போது பேசப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் ஆட்ட விதிகள், கிரிக்கெட் உணர்வு என்று வரும்போது ஆசியப் பகுதி வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர், ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுவதில்லை. இது கிறிஸ் பிராட் உள்ளிட்ட ஐ.சி.சி. ஆட்ட நடுவர்கள் பலரின் பாரபட்ச போக்கை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்படும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணி வீரரகளும் ஒழுக்க விதிகளையும், கிரிக்கெட் உணர்வு குறித்த மரபுகளையும் பலமுறை மீறினர். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவரான நியூஸீலாந்தைச் சேர்ந்த ஜெஃப் குரோவ் இது பற்றி எந்த ஒரு கவனிப்புமின்றி வாளாவிருந்தார்.

கடைசி நாள் ஆட்டத்தில் ஓவர்களை விரைவில் வீசி வெற்றி பெற வாய்ப்பு தேடி ஆஸ்ட்ரேலிய அணி முயன்று கொண்டிருக்க, சம்பந்தமில்லாமல் மைதானத்திற்குள் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இரண்டு மூன்று முறை உடற்கோப்பு பயிற்சியாளரையும், 12-வது வீரரையும் இங்கிலாந்து அணி நிர்வாகம் களத்தில் இறக்கி நேர விரயம் செய்துள்ளது. இது குறித்து பாண்டிங் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர், கள நடுவர்கள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையே இந்தியாவோ, பாகிஸ்தானோ, இலங்கையோ செய்திருந்தால்... அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் ஐ.சி.சி.யை கிழித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் கப்சிப்.

இங்கிலாந்து அணியின் காலவிரயப் போக்கு குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூட 'பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தது' என்று எழுதியுள்ளார். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவருக்கு இங்கிலாந்தின் உத்தி சிறப்பாக தெரிந்தது போலும்.

இதே கடைசி தினத்தில் பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் அவுட் இல்லாத ஒன்றை நாட் அவுட் என்று தீர்ப்பளித்ததற்கு ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து முனகல் வசையில் ஈடுபட்டார். மேலும் அன்றைய தினத்தில் அளவுக்கு அதிகமாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அவுட் கேட்டு முறையீடு செய்தனர். இவை எதனையும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர்களும், நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை.

நடுவர் தீர்ப்பை எதிர்த்து கங்கூலி, பாகிஸ்தான் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் நடந்து கொண்ட போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கைகளை ஐ.சி.சி. ஆட்ட நடுவரும் கள நடுவர்களும் செய்ததை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த பாரபட்சம்?

இதே 5ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடும், ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் வசைமாரியில் ஈடுபட்டதோடு, ஒருவரையொருவர் இடித்துக் கொண்டனர். உடல் ரீதியான தொடர்பு கூடாது என்று கிரிக்கெட் விதியே இருக்கிறது. ஆனால் இருவரும் தண்டிக்கப்படவில்லை. எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை.

கடந்த முறை ஆஸ்ட்ரேலியா, இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது கௌதம் கம்பீருக்கும் ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் உடல் ரீதியாக மோதிக் கொண்டனர். அதில் கௌதம் கம்பீருக்கு இரண்டு போட்டிகள் தடை விதித்து தீர்ப்பளித்தார் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட்.

ஏன் ஸ்டூவர்ட் பிராட் அல்லது பீட்டர் சிடில் மீது ஒரு எச்சரிக்கைக் கூட விடுக்கப்படவில்லை?

ஆனால் துபாயில் உள்ள ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதுதான் மிகப்பெரிய தமாஷ். "முதல் டெஸ்ட் போட்டியில் நடத்தை மீறல் குறித்தோ அல்லது வேறு விவகாரங்கள் குறித்தோ எந்த வித மீறலும் நிகழவில்லை" என்று கூறியுள்ளார்!

மற்றொரு மோதலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வானிடம் பீட்டர் சிடில் விதி மீறல் செய்தார். அதாவது மூன்று பவுன்சர்களை வீசி அவரைக் காயப்படுத்தினார். இது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொள்வோம். ஆனால் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வீரரின் அருகில் சென்று கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் பீட்டர் சிடில். இது தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஐ.சி.சி.ஆட்ட நடுவருக்குத் தெரியவில்லை.

இதையே ஹர்பஜன் செய்திருந்தால்...?

அதே போல் மிட்செல் ஜான்சனும், பீட்டர்சனும் ஒரு மோதலில் ஈடுபட்டனர். இவையெல்லாமே ஐ.சி.சி. நடத்தை விதி மீறல்களே. ஆனால் ஈடுபட்டது இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய வீரர்கள், விளையாடப்படுவது ஹை-வோல்டேஜ் ஆஷஸ் தொடர், இதனால் நடவடிக்கை இல்லை.

இவ்வாறெல்லாம் களத்தில் மோசமாக நடந்து கொண்டாலும் இரு அணித் தலைவர்களும் எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. இது சகஜம்தான் என்று கூறுகின்றனர்.

சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா நடித்த ஒரு திரைப்படத்தில் சத்யராஜும் வடிவேலுவும் ஒருவரையொருவர் மாறி மாறி கேவலப்படுத்திக் கொள்ள, கோவை சரளா அது பற்றி வடிவேலுவிடம் கோபப் பார்வை வீசுவார். அப்போது வடிவேலு, "நாங்க சின்ன வயசிலேர்ந்து பிரெண்ட்ஸ், அப்பொதிருந்தே நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான், இதை நாங்க ஒரு விளையாட்டாவே எடுத்துக்குறது" என்று கூறுவார்.

அது போல் பரபஸ்பர கேவலப்படுத்தலை இரு அணிகளும் ஒரு 'விளையாட்டாவே' எடுத்துக் கொள்கிறார்கள் போலும்!

அணித் தலைவர்கள் என்னவேண்டுமானாலும் விளக்கம் கொடுத்து விட்டுப் போகட்டும், கிரிக்கெட் ஆட்டத்தை அதன் உணர்வுடனும், விதிகளுக்கு இணங்கவும் நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் ஐ.சி.சி. இந்த போக்கை எப்படி பாரபட்சத்துடன் பார்க்கிறது என்று புரியவில்லை.

Tuesday, July 21, 2009

மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல்

பரிணாம வளர்ச்சியால் சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக உருமாற்றம் அடைந்த விலங்கினம், தனித்தனிக் குழுக்களாகத் திரிந்தபோது, தங்களது பாதுகாப்புக்காகக் கட்டமைத்ததுதான் சமூகம்.

கடைசியில், அந்தச் சமூகத்தைக் காப்பதற்காகவே போர்களை நடத்தி, தங்களைத் தாங்களே, மனித இனம் பலியிட்டுக் கொள்ளத் தொடங்கியது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இனம், மதம், மொழி, இடத்தின் பெயரால் சமூகத்தில் நடந்த மோதல்களால், ரத்தக் கறை படியாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு, "போர்' எனும் கிருமி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது.

தற்போதைய போர்களில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள், நோய்க் கிருமிகளைவிட அதிகமான மனிதர்களைக் கொல்கின்றன. நவீன மருத்துவ உதவியுடன், கிருமிகளையாவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட முடியும்.

ஆனால், படைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் போர்களைத் தடுக்க, மேற்கொள்ளப்படும் எல்லாவித அஹிம்சை முறைகளும் தோற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் மனிதர்கள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்படுவதை மற்றொருபுறம் மெüன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது. சூடான், நைஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்நாட்டுப் போர்களால் மிகப் பெரிய அகதி முகாம்களாகி விட்டது கண்கூடு. அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணம் மேற்கொண்டு, புரையோடிய புண்ணுக்கு மருந்திடும் பணியை மட்டுமே, சர்வதேச அமைப்புகள் செய்து வருகின்றன.

கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அதீத வளர்ச்சியால், உலகம் சுருங்கியது. ஆனால், நாடு பிடிக்கும் வேட்கையில் சர்வாதிகாரிகள் நடத்திய போர்கள், கோடிக்கணக்கான மக்களை, அவர்களது வாழ்விடத்தோடு சேர்த்து அழித்தன.

இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுகளிடையே தீராத பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, மேலை நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ், நிரந்தரமாக அவை கொண்டு வரப்பட்டன. கடந்த நூற்றாண்டில் சமூகம் எதிர்கொண்ட இரு பேரழிவுகளான உலகப் போர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் என்கிறது ஓர் ஆய்வு.

இயற்கைப் பேரழிவின்போது கூட, இதுபோன்ற அதிகமான உயிரிழப்புகள் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டதில்லை. இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா முதன்முதலாக பரிசோதித்த இரு அணுகுண்டுகள், ஜப்பான் நாட்டின் இரு நகரங்களையே தரைமட்டமாக்கின. துயரமான வரலாற்றுப் பதிவாகிவிட்ட அந்நிகழ்வில், ஓரிரு வினாடிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அணுகுண்டுத் தாக்குதலின் கதிரியக்கப் பாதிப்புகள், ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வநாசம் நிச்சயம் என்பதை உணர்ந்தும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே நாளில் அழிப்பதற்குண்டான அளவுக்கு அணு ஆயுதங்களை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அதிநவீன போர் உத்திகளால் படைத்திறனைப் பன்மடங்கு பெருக்கி, விண்வெளி யுத்தத்துக்கே மேலைநாடுகள் தயாராகிவிட்ட நிலையில், இனியோர் உலக யுத்தம் மூண்டால், புவியும் ஓர் நெருப்புக் கோளமாகி, பேரண்டத்தில் சுற்றிவரும் என்பதில் சந்தேகமில்லை.

இதில், வளரும் நாடுகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூட தன்னிறைவை அடையாத அந்நாடுகளும், ஆயுதங்களை வாங்க பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றன. ஆயுதப் போட்டியை உருவாக்கி, வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களை முடக்கி, அந்நாடுகள் எப்போதும் தங்களிடம் கையேந்திகளாக நிற்கும் தந்திரத்தை, மேலைநாடுகள் செயல்படுத்தி வருகின்றன.

இதனால், கோடிக்கணக்கான ஏழைகள் வறுமைக் கோட்டுக்குள்ளேயே, விட்டில் பூச்சிகளைப் போல வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது. ராணுவத்துக்கு, இந்தியா ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் நிதி, சில ஆண்டுகளுக்கேனும் சுகாதார மேம்பாட்டுக்குத் திருப்பி விடப்பட்டால், அத்தனை ஏழைகளுக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கலாம் அல்லது அத்தொகையில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்துவிடலாம் போன்ற செய்திகள் வியப்பை அளிக்கவில்லை.

போர்களற்ற சமுதாயம் உருவாக மதங்களாவது துணை நிற்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல நாடுகளில் மத மோதல்கள் தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.

தெற்காசியாவில் அதிகமான இசுலாமியர்களை ஏவுகணைகளால் அழித்த நாடுகள் எவை எனக் கேட்டால், ஈராக், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் கூட பதில் அளித்துவிடும் அளவுக்கு கிழக்கும், மேற்கும் நட்பு (?) பாராட்டி வருகின்றன. புத்த மதம் தழுவிய நாடும், பெரும் போரை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருப்பது, புவி சந்தித்திருக்கும் விநோதங்களில் ஒன்று.

நேயம், சக உயிர்களைக் காத்தல் உள்ளிட்ட எந்தவிதமான மத சித்தாந்தங்களுக்கும் இடம் கொடாமல், காட்டு விலங்குகளைப் போல மனிதர்களை வேட்டையாடி அழிக்கும் கொலைத் தொழிலான போர், துரதிருஷ்டவசமாக தற்போதைய நவீன சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

எதிர்காலத்தில் ஆயுதப் போட்டியாலும், சர்வாதிகார மனப்பான்மையாலும் நடத்தப்படும் போர்களால்தான், மனித குலத்துக்கு பேராபத்து ஏற்பட உள்ளது. நுகர்வுக் கலாசாரத்தால் சுயநலம் மிகுந்திருக்கும் காலகட்டத்தில், பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம் எதிர்கொண்டுள்ள பேராபத்து போர்தான். போருக்குப் பின் அமைதி திரும்பும் என்று, எந்தவொரு நாட்டின் தலைவராவது உறுதி அளித்தால், அது மயான அமைதியாகத்தான் இருக்கும்..!

அங்கே வாழ்வை இழந்து, வேரற்ற மரங்களைப் போல விழும் மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல் போகலாம்..!

Thursday, July 16, 2009

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு என்ன?

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விஷயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது. புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கை அரசு இந்த விஷயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.

அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது.

"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.

அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.

Wednesday, July 15, 2009

ஜெயலலிதா கவனிக்கவும் - மார்க்சிஸ்ட் வரதராஜ‌ன் அறிவுரை!

மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சீற்றத்தைக் காட்டி, தடித்த வார்த்தைகளை அள்ளித் தெளித்து, அ.இ.அ.‌தி.மு.க. அறிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது எ‌ன்று‌ம் இந்தச் சீற்றத்தை விடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள விமர்சனக் கருத்துக்களை அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்தித்துப் பார்ப்பது நல்லது எ‌ன்று‌ம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயல‌ர் என்.வரதராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், 15-வது மக்களவைத் தேர்தல் தொடர்பான பரிசீலனை அறிக்கை ஒன்றை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில், அத்தீர்மானம் 8.7.2009 அன்று வெளியிடப்பட்டது. அதை கூட்டணி தர்மத்திற்கு எதிரானது, விஷமத்தனமானது, நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, அரசியல் நாகரிகமற்றது என்று கடுமையாக விமர்சித்து அ.இ.அ.தி.மு.க. தலைமை நிலையச்செயலர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டையன் சி.பி.எம் மத்தியக்குழு வெளியிட்டுள்ள மக்களவைத் தேர்தல் பரிசீலனை அறிக்கையையோ, தமிழ்நாடு மாநிலக்குழுவின் தீர்மானத்தையோ முழுமையாகப் படித்துப பார்த்திருப்பாரேயானால், இவ்வாறு சீற்றத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

'அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந்த தோல்விக்கு அ.இ.அ.தி.மு.க.வைக் குறை கூறுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்?' என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல மக்களவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க. தன்னிச்சையாகச் செயல்பட்டது என்று பொத்தாம் பொதுவாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சா‌ற்‌றியிருப்பதாகவும் அவர் வேதனைப்பட்டுள்ளார்.

''அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது; மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக்கட்சிகளும் முன்வைத்த மதச்சார்பற்ற மாற்று அரசு என்ற அறைகூவலை மக்கள் சாத்தியமான ஒன்றாகவோ, நம்பகத்தன்மை கொண்டதாகவோ கருதவில்லை; மத்தியில் நிலையான மதச்சார்பற்ற அரசு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைமையில்தான உருவாக்க முடியும் என்று மக்கள் கருதினார்கள்; இவைதான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்‌றி பெற்றதற்கும், பா.ஜ.க. இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவியதற்கும் காரணம்'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு நிதானத்தோடு பரிசீலனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் மாநிலக்குழுவின் தீர்மானத்தில், 'அ.இ.அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு கண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற சரியான முடிவை மேற்கொண்டு செயல்பட்டது'' என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, அகில இந்திய அளவில் நிலவிய காங்கிரசுக்கு சாதகமான சூழல் தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது; மாநில தி.மு.க.அரசின் மக்கள் நலத்திட்டங்கள் இந்த வெற்றிக்கு உதவியது; இதனோடு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கடைபிடித்த பணபலம், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை அராஜகம், சிவகங்கை போன்ற சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் ஆகியவற்றையும் மாநிலக்குழுவின் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் செல்வாக்கும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிகள் பெற்றிருந்த வாக்கு சதவிகிதமும், இந்த அணிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை நல்கியிருக்க வேண்டும். இது சாத்தியமாகாமல் போனதற்கான பிரதான காரணங்களாக அகில இந்திய நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றையே சி.பி.எம் முன்வைத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், ஒரு சில பலவீனங்களை சுட்டிக் காட்டியதை மட்டுமே மையமாக வைத்து செங்கோட்டையன் அறிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான அரசியலாகாது.

சி.பி.எம். மத்தியக்குழுவின் பரிசீலனை அறிக்கையிலேயே, தமிழகத்தில் கட்சி போட்டியிட்ட `மூன்று தொகுதிகளிலுமே அ.இ.அ.தி.மு.க. நமது வேட்பாளர்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்டார்கள்' என்பதும் இடம் பெற்றிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவுகளைத் தொடர்ந்து நிலை நாட்டுவது, மக்கள் பிரச்சனைகள் மீது கூட்டு இயக்கங்களில் அவர்களைக் கொண்டு வருவது ஆகியவற்றை சி.பி.எம். அகில இந்திய அளவில் எதிர்காலக் கடமைகளாக முன்நிறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடிக்க சுயேச்சையாகவும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும் என்று மாநிலக்குழுத்தீர்மானம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இத்தகைய அரசியல் வழியில் நின்றுதான் நிகழ்கால சட்டமன்றக்கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி செயலாற்றி வருகிறது. இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க மறுத்து, விமர்சனங்களை எதிர் கொள்வதற்கான குறைந்தபட்ச சகிப்புத் தன்மையைக் கூட இழந்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சீற்றத்தைக் காட்டி, தடித்த வார்த்தைகளை அள்ளித் தெளித்து, அறிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தச் சீற்றத்தை விடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள விமர்சனக் கருத்துக்களை அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்தித்துப் பார்ப்பது நல்லது எ‌ன்று வரதராஜ‌ன் கூறியுள்ளார்.

கதை சொல்லப் போறேன், ஸென் கதை சொல்லப்போறேன்

சீன ஸென் கதைகளை பற்றி உயர்வாக சொல்கிறார்களே. என்னதான் இருக்குன்னு படித்துப் பார்த்தேன். ஆழ்ந்த தத்துவம் உள்ள அடக்கமான திருக்குறள் வடிவான கதைகள். இரண்டு வரியில் பெரிய தத்துவத்தை திருக்குறள் சொல்லவில்லையா. அதே போல ஒரு சிறுகதையை சொல்லி வாழ்வின் தத்துவத்தை, பிரமாண்டத்தை ஸென், க்வான் எனப்படும் இந்தக் கதைகள் முயற்சி செய்கின்றன.உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், அது ஒரு மிகப் பெரிய மடாலயம். அதில் பல சீடர்களோடு ஒரு தலைமை துறவி இருந்தார். ஒவ்வொரு சீடராக ஞானம் பெற்று, குருவிடம் விடை பெற்று வெளியேறினார்கள்.

ஒரு சீடர் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படவில்லை.அடுத்த வருடம் போகலாம், அடுத்த வருடம் போகலாம் என்று பல வருடங்கள் அந்த சீடனை இருக்க வைத்துவிட்டார்கள். அந்த சீடன் மனம் நொந்தான். ஒரு வருடத்தில் சின்ன பையன்கள் எல்லாம் வெளியேறி விடுகிறபோது, பண்ணிரண்டு வருடம் வேலை செய்தும் என்னை வெளியேற்றவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான், கோபமானான்.

நேரே குருவிடம் போனான்.‘நான் நன்றாக பெருக்குகிறேன், நன்றாக வேலை செய்கிறேன், சுத்தமாக தோட்ட வேலை செய்கிறேன். உங்கள் துணிகளை எல்லாம் துவைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுத்தம் செய்து வைக்கிறேன். அவ்வப்போது சமையலும் செய்து வைக்கிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறேன். இவ்வாறெல்லாம் பணி செய்வதால் என்னை வெளியே அனுப்பாமல் நீங்களே எப்பொழுதும் என்னை வேலைக்காரனாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேலைக்காரனாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. இங்கு வந்தது ஸென் தெரிவதற்கு எனக்கு எப்பொழுது ஞானம் வரும். எப்பொழுது வெளியே அனுப்புவீர்கள். அவர்கள் எல்லாம் ஞானிகளா, நான் இல்லையா’ என்று உரத்த குரலில் கத்தினான்.

அவன் பேசத் துவங்கும் போதே குரு கெட்டிலில் உள்ள தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான். தொடர்ந்து குருவும் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் இடையறாது கத்திக் கொண்டிருந்தான். குருவும் இடையறாது தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார். தேநீர் கோப்பையில் வழிந்து, போப்பையிலிருந்து தட்டில் விழுந்து, தட்டிலிருந்து மேஜையில் விழுந்து, மேஜையிலிருந்து தரையில் விழுந்து மொத்த தேநீரும் கொட்டும் வரை குரு அசையவில்லை.

தேநீர் மொத்தமும் கீழே வழிந்து ஓடியது. அந்த தேநீர் குவளையை டக்கென்று ஒரு சத்ததோடு அவர் மேஜையில் வைத்தார். அந்த சீடன் விழித்துக்கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. ‘எனக்கு ஞானம் வந்து விட்டது’ என்று சொன்னான். குரு அவனை வணங்கி ‘போய் வா’ என்று விடை கொடுத்தார்.என்ன புரிகிறது? உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருந்து, இடையறாது மனம் பேசிக் கொண்டிருந்தால். மனம் பேசுவதை வாய் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

உள்ளே இருப்பது மொத்தமும் வெளியே கொட்டி விடப்பட்டால், அப்பொழுது டக்கென்ற காலி ஓசை கேட்கும். உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. இது போல பல கதைகள் இருக்கிறது.இன்னொரு கதை,அதுவும் ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான்.

பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான், தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண்! எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார்.

அவனுக்கு கோபம் வந்துவிட்டது.‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி பேசிவிட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.குரு கீழே இறங்கினார், சீடன் வியப்போடு பார்த்தான்.

குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.

குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

Tuesday, July 14, 2009

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் - இந்தியப் படை அணிவகுப்பு

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான பாஸ்டில்லா தின கொண்டாட்டங்கள் பாரிசில் இன்று நடைபெற்றன. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றதுடன், இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது. இநதியப் பிரதமர் ஒருவர் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில்லி தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது இதுவே முதல்முறை.

இந்த நாளையொட்டி இந்திய வீரர்கள் சுமார் 400 பேர், பேண்ட் வாத்தியங்களுடன் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியுடன் இணைந்து, பிரதமர் மன்மோகன் சிங் கண்டு களித்தார். மன்மோகன் சிங் தவிர கம்போடிய பிரதமர் ஹூன் சென், ஜெர்மன் அதிபர் ஹார்ஸ்ட் கோஹ்லர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிரான்ஸ் அதிபர் தனது மனைவியும், பாப் பாடகியுமான கார்லா ப்ரூனியுடன் கலந்து கொண்டார்.

இந்தியா - பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மன்மோகன் சிங்கிற்கு சர்கோஸி இந்த அழைப்பை விடுத்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான அணிவகுப்பில் அணியும் கறுப்பு, சிவப்பு உடைகளில், வெள்ளை நிற பார்டர்களுடனும் (புட்டீஸ்), கையுறைகளுடனும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் (ஒரு மைல்) தொலைவிற்கு இந்த அணுவகுப்பு விமரிசையாக நடைபெற்றது.

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தையும், அங்கு பிரதமர் முன்னிலையில் இந்திய வீரர்களின் அணிவகுப்பையும் இந்திய செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்திய வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே பிரான்ஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள், அந்நாட்டின் தேசியக் கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிற புகைகளை கக்கிச் சென்றன.

இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பிரான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரான்ஸ் நிறுவனமான அரீவா, இந்தியாவிற்கு 6 அணு உலைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாடு குடியரசாக உருவானதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 14ஆம் தேதியன்று பாஸ்டில்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Sunday, July 12, 2009

உலக ஒவியச் சந்தையில் ஓர் இந்தியர் - தையப் மேத்தா (1925-2009)

தையப் மேத்தா (1925-2009) - பெருமை வாய்ந்த நவீன ஓவியர்; ஜுலை 3, 2009 அன்று மறைந்தார். அவருக்கு வயது 84. உலக அரங்கில், இந்திய ஓவியங்கள் அன்னியமானவை என்ற கண்ணோட்டத்தை மாற்றி, நவீன ஓவியத்தில் நாங்கள் எந்த அளவும் சளைத்தவர் இல்லை என்று தன் ஓவியங்கள் மூலம் நிரூபித்தவர். தனிமை விரும்பியான இவர் சிறிதே பேசினாலும், இவரது ஓவியங்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன. வாழும் காலத்தே ஒருவருடைய ஓவியம் முதல் முதல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டதென்றால் அது இவருடைய 'மஹிஷாசுரா' மட்டுமே. நியுயார்க்கில் உள்ள கிரிஸ்டீஸ் ஏலக் கூடத்தில் 2005ஆம் வருடம் $1.58 மில்லியன் விலைக்கு எடுக்கப்பட்டது. உலக ஒவியச் சந்தையில் ஓர் இந்தியரின் ஓவியம் மில்லியன் டாலர் விலையைத் தொட்டது 2002இல் இவரின் ஓவியம் மூலமே.

நம்பிக்கை இழந்து கொண்டிருந்த நிறைய நவீன ஓவியர்கள் மத்தியில் தையப் மேத்தாவின் ஓவிய விலை, ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்திய ஓவியங்கள் ஒரு மூலதனமாகவும், பங்கு முதலீடாகவும் உருவாக இவரது ஓவியத்திற்குக் கிட்டிய தொகையும் ஒரு காரணம்.

1925ல் குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் 'போரா முஸ்லிம்' குலத்தில் பிறந்தவர் தையப். சினிமாத் துறையில் கலை இயக்குநராக வேண்டும் என்பதே அவர் கனவாக இருந்தது. அதை மெய்ப்பிக்க மும்பையில் உள்ள சர்.ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் பயின்று 1952ஆம் வருடம் பட்டயம் வாங்கினார். பின்பு லண்டன் சென்று 1959 முதல் 1964 வரை அங்கேயே தங்கிப் பணியாற்றினார். 1968இல் ராக்ஃபெல்லர் ஸ்காலர்ஷிப் பெற்று, அமெரிக்கா சென்றார். 1970இல் கூடல் என்ற மூன்று நிமிடத் திரைப்படத்தை எடுத்தார். இது அவருக்கு ஃபிலிம் ஃபேர் விமர்சகர் விருதைப் பெற்றுத் தந்தது.

கலை என்பது கலைக்காக மட்டுமே (art for art's sake) என்ற நோக்குடனேயே இவரது ஓவியங்கள் இருந்தன. குறைவான உருவங்கள், ஆனால் நிறைவான வண்ணங்கள் என்பதே இவர் அடையாளம். தையப்பின் கோடுகளில் இருக்கும் வேகம், சமுதாயத்தின் மேல் உள்ள கோபங்களைச் சித்தரிப்பது போல் தோன்றும். 1947களில் பிரிவினை நேரத்தே நேர்ந்த ஜாதீயக் கலவரம், அவரது ஓவியத்தின் மையக் கருவாக அமைந்தது. அவர் கண்முன் நடந்த இந்து-முஸ்லிம் கலவரங்கள் அவரை மிகவும் பாதித்தன. அதையே உருவகமாகக் கொண்டு, கட்டுண்ட காளையைப் பல கோணங்களில் வரைந்தார். காளையைப் பற்றி அவர் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார் "நீங்கள் எங்காவது கட்டுண்ட, முடமாக்கப்பட்ட காளையைக் கண்டுள்ளீர்களா? நேரடியாகக் கதை கூறாமல், மறைமுகமாக என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய வன்முறைச் சிதைவுகளைப் பதிக்க நான் கண்ட உருவமே இந்தக் காளை".

எப்படி மஹிஷனை ஒரு கொடூர அரக்கனாகப் புராணங்கள் சித்தரித்ததோ, இவரது மஹிஷனும் 'ஜாதி, சமய அரக்கனை' சித்தரிப்பதாக கொள்ளலாம். ஓர் இஸ்லாமியராகப் பிறந்து இந்து புராணங்களைத் தழுவி மஹிஷனையும், காளியையும் வரைந்து உலக அரங்கில் இந்திய ஓவியத் தரத்தை உயர நிறுத்தியதே, தேசிய ஒருமைப்பாட்டின் சிறந்த அம்சமாகக் கொள்ளலாம். கலையைச் சமயங்களுக்கு அப்பால் கொண்டு சென்ற தையப் மேத்தாவின் மறைவு, இந்திய ஓவியத் துறைக்கு ஈடு செய்ய முடியா இழப்பு. 2007இல் இந்திய அரசு அவரது கலைச் சேவைக்காக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

கிராம வாழ்க்கை - தொலைந்துபோனதேன்?

வாழ்க்கையின் மிகச்சிறந்த சுவாரஸ்யம் எதில் இருக்கிறது? அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத அதன் மர்மம்தான் என்று படுகிறது. முன்பின் பரிச்சயம் இல்லாத மலைப்பாதைகளைப் போல் புதிது புதிதான திருப்பங்களையும், தரிசனங்களையும் தினம் தினம் கொட்டிக் கொடுக்கிறது கிராமத்து வாழ்க்கை.

வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் நம்மை எப்படி கட்டமைக்கப் போகிறது? திகட்டத் திகட்ட சந்தோஷங்களை ஊற்றியா? சோகங்களின் சங்கிலித் தொடர்களில் சிக்க வைத்தா? வெறுமையின் இருட்டறையிலிருந்து நிராசைகள் நிரப்பியா? எதுவுமே தெரியாது.

ஆனாலும், கிராம வாழ்க்கையில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நம்மைப் பதில் தெரியாத பிரதேசத்திற்கு அழைத்து சென்று கொண்டுதான் இருக்கின்றன.

எவ்வளவு திட்டமிட்டு தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் நாள்களின் நிகழ்வுகளை இயற்கையின் கை மாற்றி எழுதுகிறது. இந்த மாறிய புதிர்கள்தான் வாழ்க்கை. காலத்தின் முடிவிலிருந்து கிளம்பும் ஒரு சின்ன தொலைப்பேசிக் குரல், முத்திரைக் குத்தப்பட்ட ஒரு கடிதம், வழியில் சந்திக்க நேரும் ஒரு சினேகம், சட்டென்று அந்த தருணத்தின் வெயில், காலம் இடம் போன்றவற்றின் கன பரிமாற்றத்துடன் நம்மை மாற்றி அமைக்கும் யாரோ ஒருவரின் வாக்கியம் என வாழ்க்கையின் சதுரங்க பலகையில் பலவிதமான காய்கள் நம்மை நோக்கி நகர்த்தி வைக்கப்படுகிறது. கட்டங்களை மீறும் குற்றம் கலந்த குறுகுறுப்புடன் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

விழுப்புரம் எனபக் கூறிக்கொள்ளும் நான் விழுப்புரம் - திருச்சி சாலையின் பரபரப்புகளுக்கு இடையே சலனமின்றி இருக்கும் கிராமம் அது.... என் கிராமம் தென்பெண்ணையாற்றின் கரையில்.

தாத்தா விவசாய வேலை செய்பவர், பாட்டிதான் எங்களைப் பார்த்துக் கொள்வார். எந்த நேரமும் வீடு களைகட்டியிருக்கும். அந்தக் கூரை வீட்டின் சுவரோரத்தில் இருக்கும் எல்லா பானைகளையும் சிறுவயதில் என் கைகள் துழாவியிருக்கின்றன, முறுக்கு எல்லடைக்காக. இரவு நேரம் வந்து விட்டால் பாட்டி அனைவருக்கும் சோறூட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுவாள். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என கதைகள் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். சில கதைகள் திகைப்பை அளித்து மிரட்டி எடுக்கும். சில கதைகள் சிரிப்பை வரவழைக்கும். சில கதைகள் யோசிக்க வைக்கும்.

வாழ்க்கை முழுவதும் ஆயிரம் ஆச்சரியங்கள் கொட்டிக் கொடுத்த கிராமப் பயணம் இப்போதோ விடுமுறைகளில் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விடுமுறையில் எல்லாப் பேர பிள்ளைகளும் வந்து விடுவார்கள் என நாள்களை எண்ணியவாறே தாத்தா பாட்டி இப்போதும் காத்துக் கிடப்பார்கள். அதுவரை சந்திக்காத உறவுகள் எல்லாருமே அந்த விடுமுறைக்காகக் காத்துக் கிடப்போம்.

தாத்தா பாட்டியும் எங்களைப் போல் விடுமுறைக்காகக் காத்திருப்பார்கள். அப்பாவிடம் எப்போது பேசினாலும் 'மாதம் ஒரு முறை தாத்தாவிடம் உன் குழந்தையை ஒரு முறை கொண்டு வந்து காட்டி விட்டு போ' என வேண்டுகோள் வைப்பார். என் சிறுவயதில் தாத்தாவின் இராமாயணம், மகாபாரதம் கேட்க புரட்டாசி இரவுகளில் பேயாய் விழித்திருந்த நாட்கள் ஒவ்வொன்றும் இன்று தாத்தா பாட்டியின் தனிமையைப் பேசும். என் தலைமுறையின் இளைய வாரிசுகள் எல்லாம் கோடையில் கூடி கூத்தடிக்கும் போது, அந்த மூத்த தலைமுறையின் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதைப் பார்த்திருக்கிறேன்.

விழுப்புரம் பஸ் நிலையத்தில் தாத்தா பாட்டிக்கு பழம் மற்றும் கார வகைகளை வாங்கி கொண்டு செல்வது என் பயண வழக்கங்களில் ஒன்று. விழுப்புரம் நகரத்திலும் கிராமத் தனம் இருந்தாலும் என் தாத்தா பாட்டியின் கிராமத்தின் மீது எனக்குத் தனி காதல் இருந்தது. சென்ற விடுமுறைக்கும் இந்த விடுமுறைக்கும் மாற்றம் இல்லாத புழுதி படிந்த தெருக்கள். மக்களின் எளிமையான வாழ்க்கை. விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம். வார்த்தைக்கு வாக்கப்பட்ட மக்கள் என எல்லாமும் பிடித்திருந்தது.

கிராமங்களில் எத்தனை எத்தனை மரங்கள்? ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு ரகசியம் காத்திருந்தது. தென்னை மரம் உடம்பெல்லாம் வளையல்களோடு இளநீர் திருட அனுமதிக்கும். பனைமரம் மார்புகளில் சிராய்ப்புகளைப் பரிசாகக் கொடுத்து நுங்குகளுடனும், சிறு சிறு தேள்களின் கடியுடனும், காத்திருக்கும். சடைசடையாய் பழங்கள் பழுத்த புளியமரங்கள் மஞ்சளும், சிவப்பும் கலந்த பூக்களுடன், தூக்கில் தொங்கி இறந்தவர்களின் ஆவிகளுடன் கிளை ஆட்டும்.

இலைகளில் வாசனையை ஊற்றிக் கொண்டு மாமரங்கள் மாலைகளில் அழைக்கும். மண்ணில் உதிர்ந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல் பூக்களைச் சிதற விட்டு வேப்பமரம் நறுங்காற்று வீசும். மேலே இருந்து கீழே விழுந்தவர்களைப் பற்றிய பயங்களைப் பூசிக் கொண்டு நாவல் மரம் வசீகரிக்கும். கிளையெல்லாம் பச்சைக் கிளிகள் படர்ந்திருப்பது போல் பச்சை நிற இலைகளுடனும், சிவப்பு நிற பழங்களுடனும் ஆலமரம் குருவிகளின் குரலில் ஆலாபனை செய்யும்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தாத்தா பாட்டியையும், கிராமத்தையும் பார்க்க செல்ல முடியாமல் போனது. அப்படியே போனாலும் ஓரிரு நாள்கள் மட்டுமே அங்கு தங்குவேன். காலம் தன் நிலையை மாற்றிக் கொள்ள தாத்தாவின் கூரை வீடும் சரிந்து விழும் அபாயக் கட்டத்தில் இருக்கவே, அவரை சிமெண்ட் தளமமைத்த வீட்டுக்கு மாற்றவேண்டியாயிற்று. அதை இடித்துவிட்டுக் மெத்தைவீடு கட்டி விடலாம் என என் குடும்பத்தார் யோசிக்க, அந்த இடத்தில் அதே வீட்டையே புதுப்பிக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது. கனவும், பொருளாதார தேவையும் என்னை சென்னை நோக்கி விரட்டியடிக்க மாநகரத்துக்குப் பயணமாகி விட்டேன். பாதிக்கு மேல் மெலிந்த தாத்தாவின் தேகம், அரைகுறையான அவரது பார்வை, அழுக்குப்படிந்த வேட்டித் துண்டு என் நெஞ்சுக்குழிக்குள் இன்னும் அழுத்தமாய்.

என்னைப் போல் எத்தனையோ பேர் காலந்தோறும் கிராமத்திலிருந்து நகரத்திற்கும், மாநகரத்திற்கும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெட்டிகள் முழுக்க கனவுகள். அந்தக் கனவுப் பெட்டியைத் திறக்கும் சாவியைத் தொலைத்துவிட்டு, மாநகரத்து வீதிகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சம் பிழைக்கவும், மேற் கல்விக்காவும், வேலை தேடியும், புகை வண்டியிலும், பேருந்துகளிலும், லாரிகளிலும் வந்தடையும் அவர்களை மாநகரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தால் ஆசீர்வதித்து வரவேற்கிறது. மறுநாள் காலை உருக்கும் சூரிய வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும் வரை, மாநகரம் அவர்களுக்கு இனிமையானதாக இருக்கிறது!

Saturday, July 11, 2009

கட்சியின் கட்டுப்பாடில் அரசு?

மேற்கு வங்க மாநிலம் லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல்போய் அவர்களை முறியடிக்க மத்திய, மாநில அரசுகளின் போலீஸ் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கும் வரையில் அப்பகுதியில் என்ன நடக்கிறது எனும் விவரம் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதன் முழுப் பரிமாணத்தையும் நாம் புரிந்துகொண்டால் நம் நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தைவிட உள்ளே உருவாகியுள்ள ஆபத்து அதிகம் என்ற எண்ணமே மிஞ்சும்.

இடது கம்யூனிஸ்ட் கட்சி தீவிர ஒழுக்க சீலர்களான பல தலைவர்களைக் கொண்டது என்றும், அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கு வழிகோலும் வகையிலான ஆட்சி முறையை கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிறுவியுள்ளனர் எனவும் நம்மில் பலர் நினைத்து வந்தோம். ஆனால் லால்கர் பகுதி அடங்கிய மேற்கு மிதுனபுரி மாவட்டத்திலுள்ள சுமார் 50 கிராமங்களில் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்வசம் இருந்தது என்பது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. கந்தபகாரி எனும் இடத்தில் 2005-ம் ஆண்டுமுதல் போலீஸ் நிலையம் மூடப்பட்டுக் கிடக்கிறது எனும் உண்மை இப்போதுதான் வெளிவருகிறது.

1967-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணி அரசு மூலம் பதவி ஏற்றது. உணவுப்பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியன தலைவிரித்தாடியதாகக் கூறி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் பலியாகி அதன்பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. தமிழகத்தில் அரிசித் தட்டுப்பாடு, இலவச அரிசி வாக்குறுதி அளித்து 1967-ல் திமுக அரியணை ஏறியதை நினைவில் கொள்க. அதேதான் மேற்கு வங்கத்திலும் அரங்கேறியது.

இதே காலகட்டத்தில் நக்சல்பாரி எனும் இடத்தில் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர், தீவிரவாதக் கொள்கைகளை இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டுவிட்டு பதவி சுகம் தேடி ஓடி மாநில அரசில் பங்கேற்றுள்ளனர் எனக் குற்றம் சாட்டி நக்சலைட்டுகள் என நாம் இன்று அழைக்கும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்தனர்.

சாரு மஜும்தார் எனும் தலைவர் அன்றைய சீனத் தலைவர் மாசேதுங்கின் கொள்கைகளே உண்மையான கம்யூனிஸம் மலரத் தேவை எனக் கூறி வர்க்கப் போராட்டமே தங்கள் கொள்கை என அறிவித்தார். அதன்படி நிறைய நிலச்சுவான்தார்களும், வியாபாரிகளும் ""தொழிலாளர்களின் எதிரிகள்'', "பணமுதலைகள்' எனப் பெயரிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சியினரும் இனப் போராட்ட எதிரிகள் எனப் பட்டியலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

நக்ஸல்பாரிகள் நடத்திய இந்தப் போராட்டத்தின் மையப் பிரச்னை நிலங்களை, உழுபவர்களுக்கு, அதாவது விவசாயக் கூலிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான்.

1971 தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியிலிருந்து பிரிந்து பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸýடன் கைகோர்த்துக் கொள்ள, தனிப்பெரும்பான்மை பலத்துடன் சித்தார்த்த சங்கர்ரேயின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, நக்சல்பாரி இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு உதவியது. சித்தார்த்த சங்கர் ரேயின் அடக்குமுறை ஆட்சி, ஒருபுறம் நக்சல்பாரிகளைச் செயலிழக்க வைத்தது எனினும், இன்னொருபுறம், இடதுசாரிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தியது. 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் ஐக்கியம் ஏற்பட்டு, இடது முன்னணி ஆட்சியையும் பிடித்தது.

1977-ல் இடது கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், நிலத்தை ஏழை விவசாயக் கூலிகளுக்கும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் தாராளமாகப் பிரித்து அளித்தது. மத்திய காங்கிரஸ் அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டம் இதற்கு வெகுவாக உதவியது. 40 சதவிகித மேற்கு வங்க மக்களுக்கு நிலம் பட்டுவாடா செய்யப்பட்ட பெருமை அன்றைய முதல்வர் ஜோதிபாசுவைச் சாரும்.

இதுபோன்ற பரவலான நிலப் பங்கீடு, அதேநேரத்தில் நம் நாட்டில் நடந்த பசுமைப்புரட்சியையும், சிறிய நிலங்களில் நிறைய வேலையாள்கள் தீவிர விவசாயம் செய்ததையும் உள்ளடக்கி அரிசி உற்பத்தியை அமோகமாக அதிகரித்தது. விளைவு, கிராமப்புறங்களில் சிறு குறு விவசாயிகளின் வளர்ச்சி, நிறைய விவசாயக் கூலிகள் கைநிறையச் சம்பளம் பெற்றதால் உருவான கிராமப்புற சுபீட்சம்.

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நற்செயல்களால் மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்தது. நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தில் மாதச் சம்பளம் பெறுபவர்களும் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக மாறியதால் எந்தத் தேர்தலானாலும் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே உருவானது. இதன் உச்சகட்டமாக 2006-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் புத்ததேவ் பட்டாச்சார்ய தலைமையில் இடதுசாரிக் கூட்டணி 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை வென்றது.

ஆனால், 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல்வர் புத்ததேவ் அன்றைய மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுடன் லால்கர் பகுதியில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எளிமையான முறையில் ரிக்ஷாவில், அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக நிறைய கார்கள், ஜீப்கள் தொடரப் பயணித்தபோது, அப்பகுதி மக்களால் எள்ளி நகையாடப்பட்டார். மேலும் அன்று அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கண்ணி வெடிகுண்டுகள் அவர் சென்று வந்த பாதையில் வெடித்தன. இனியும் வாளாவிருக்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட, மேற்கு வங்க இடதுசாரி அரசு அதன்பின் மத்திய அரசுடன் கலந்து பேசி இரண்டு அரசுகளின் காவல் படைகளும் தாக்குதல்களை ஆரம்பித்து அரசின் பிடியிலிருந்து போய்விட்டிருந்த பல பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு மாநில அரசின் பல துறைகளும் செயலிழந்து காவல்நிலையங்கள் மூடப்பட்டு ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மக்களிடம் வரி வசூல் செய்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மாநிலத்தின் ஒரு பகுதி மேற்கு வங்க அரசின் கட்டுப்பாடில் இல்லை எனும் இந்த அதிர்ச்சி தரும் செய்தியை தென் மாநிலத்தின் எந்த ஒரு பிரஜையாலும் நம்பவே முடியாது.

கடந்த ஜூன் 18-ம் தேதி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றி அதன் இரும்பு வாசல் கதவுகள் திறக்கப்பட்டபோது மாநில அரசு மறுபடியும் இப்பகுதிக்குள் நுழைந்து தனது நிர்வாகத்தை ஏழு மாதங்களுக்குப் பிறகு நிலைநிறுத்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்படுகிறது என பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது.

லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றிய போலீஸ் படைக்கு தலைமை தாங்கிய போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீண் குமார் அளித்த பேட்டியில், மத்திய அரசின் கோப்ரா கமாண்டோக்கள் முந்தைய பல இரவுகளில் ஜிட்கா எனும் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சாலைகளில் வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றியதனால்தான் மத்திய, மாநில போலீஸ் படை முன்னேறி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்ற முடிந்தது எனவும், அதன்பின் செய்ய வேண்டிய முதல்பணி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதால் அதை நம்பி அப்பகுதி மக்கள் தைரியமாக வாழலாம் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனவும் கூறியுள்ளார்.

""மக்கள் தீவிரவாதிகளுக்குப் பயந்து போய் தங்களை மனிதக் கேடயமாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது'' எனப் பல துண்டுப் பிரசுரங்களை ஹெலிகாப்டர்கள் லால்கர் பகுதியில் வீசிச் சென்றது நமது ஜனநாயகத்திற்கு இழுக்கல்லவா எனும் கேள்வி எழுகிறது.

போலீஸ் படையினரின் தாக்குதலுக்கு எதிராக பொதுமக்களைத் தீவிரவாதிகள் மனிதக் கேடயமாக உபயோகப்படுத்தப்படுவதும், லால்கர் பகுதியில் அரசின் எல்லாத் துறைகளும் இழுத்து மூடப்பட்டுவிட்டதும், எல்லா சாலைகளிலும் குறுக்குக் குழிகள் வெட்டப்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாதபடி செய்யப்பட்டதும், எல்லா போலீஸ் ஸ்டேஷன்களின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டு போலீஸôர் ஸ்டேஷன்களுக்குப் போகாமல் இருந்துவிட்டதும், போலீஸ் உடையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி சட்டம் ஒழுங்கினை பரிபாலனம் செய்ததும், பல இடது கம்யூனிஸ்ட் குட்டித் தலைவர்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதும் இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மாசேதுங்க் பாணியில், மாவோயிஸ்டுகள் வர்க்க எதிரியாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவை தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை வழங்கி அதை நிறைவேற்ற 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கண்ணி வெடியை அவர் சென்று திரும்பிய பாதையில் வெடிக்கச் செய்ததும் எந்த வகையான நிர்வாகம் மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது என்பதை நமது இடதுசாரி கம்யூனிஸ்ட் தோழர்கள் நமக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நிர்வாகம் தொலைந்துபோய் கிராமப்புற ஏழைகள் இடதுசாரிகளை வெறுத்து தோற்கடிக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தில் நடப்பது ஏன்? கம்யூனிஸம் வெற்றியடைந்து சோஷலிசம் மலர்ந்தபின், நிர்வாகம் தேவையற்றது என்கிற மனப்போக்குடன் அவர்கள் செயல்படுவதால் நிர்வாக இயந்திரம் செயலிழந்து, தேசம் சிதறிவிட வழிகோலும் (‘‘The State will wither away’’) எனக் கூறுவார்கள். அதுபோல்தான் மேற்கு மிதுனபுரில் நிர்வாகம் செயலிழந்துவிட்டதோ?

இதுபோன்ற நிலைமை ஓரிரு நாள்களில் உருவாகிவிட முடியாது. பல வருடங்களாக நடைபெற்றுவரும் சீர்கேட்டினை உளவுப் பிரிவின்மூலம் அறிந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை என்னவென்பது எனும் கேள்வி எழுகிறது. இதுபோல் சட்டமுறையிலான ஆட்சி முறை தகர்ந்துபோன பிற இந்தியப் பகுதிகள் யாவை என அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதை ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்த வேண்டும் இன்றைய மத்திய அரசு.

மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருப்பது, அரசு இயந்திரம் செயலிழந்ததால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை. இதற்கு மூல காரணம், இடதுசாரி ஆட்சியில் கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமைதான். நிர்வாகத்திலும் சரி, காவல்துறையிலும் சரி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கட்சித் தலைவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினார்கள். கட்சி வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, மக்கள் மாற்றுக் கருத்தை வெளியிட முடியாத நிலைமை.

இது ஏறத்தாழ தமிழகத்தில் ஆளும் கட்சியின் வட்டமும், மாவட்டமும் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதுபோல என்று கூறலாம். மாவட்டச் செயலாளருக்கு அடிபணியாத மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் பந்தாடப்படுவதுபோல மேற்கு வங்கத்திலும் ஆரம்பத்தில் நடந்தது.

நல்ல வேளையாகத் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால், ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்தது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி மட்டுமே ஆட்சியில் தொடர்ந்ததும், மார்க்சிஸ்ட் தவிர ஏனைய கூட்டணிக் கட்சிகள் பெரிய அண்ணனின் அடாவடிக்கு அடிபணிந்து வாய்மூடி மௌனியானதும், நிர்வாகம் செயலிழந்துவிட வழிகோலியது.

தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி தேர்தல்களில் வெற்றி பெற்றதற்குக்கூட இந்த நிர்வாக இயந்திரம் உதவியிருக்க வாய்ப்பிருக்கிறது. மக்கள் மத்தியில் இதுவே அதிருப்தி அலையை எழுப்பி இருக்கக் கூடும். இந்த அதிருப்தி அலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் மாவோயிஸ்டுகள் என்பதுதான் உண்மை. விளைவு? இடதுசாரித் தலைவர்களும் கட்சிக்காரர்களும், அவர்களுக்கு சேவகம் செய்த காவல்துறை உள்ளிட்ட நிர்வாக இயந்திரமும் அடித்து விரட்டப்பட்டனர்.

கட்சியின் கட்டுப்பாடில் அரசு என்று இறுமாப்புடன் இருந்த மார்க்சிஸ்ட் தலைமை, தனது கட்டுப்பாடில் இருந்த ஆட்சியை மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாடில் கைநழுவவிட்ட அசட்டுத்தனம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் பிரித்துப் பார்த்து, நிர்வாகத்தைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காமல் போனால், எந்த ஓர் அரசும் வெகுஜன விரோத அரசாக மாறும் என்பதை மேற்கு வங்கம் உணர்த்தி இருக்கிறது.

வட்டம், மாவட்டம் என்று தங்களைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக் கொண்டு வளையவரும் நம்ம ஊர் தானைத் தலைவர்கள் இதைப் பார்த்தாவது பாடம் படிப்பார்களா?

Thursday, July 9, 2009

போலீஸ் வீட்டில் சோதனை - தமிழகம் முழுவதும் 16 இடங்களில்!

சென்னையில் கடந்த ஆண்டு “கோல்டு குவெஸ்ட்” நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது. இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து அதன் நிர்வாகிகள் புஷ்பம், பத்மா உள்பட பலரை கைது செய்தனர்.

இந்த நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் கட்டினால் தங்க காசு வழங்கப்படும். அவர்கள் 3 உறுப்பினர்களை சேர்த்து விட்டால் ஊக்கத்தொகை கிடைக்கும். இவ்வாறு சங்கிலி தொடர் போல் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோர் தங்கள் நகையையும், வீட்டையும் அடமானம் வைத்து சேர்ந்தனர். மேலும் பலர் வேலையை ராஜினாமா செய்து விட்டு உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு நேரமும் ஈடுபட்டனர்.

ஏராளமான ஏஜெண்டுகள், இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இங்கு மோசடி நடப்பதாக போலீசுக்கு புகார் வந்ததால் இந்த நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஏஜெண்டுகள் பலர் தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெரோஸ்கான் என்ற ஏஜெண்டை பிடிக்காமல் இருக்க அவரிடம் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சி.பி.சி. ஐ.டி. இன்ஸ்பெக்டர் சுந்தரரேஸ்வரபாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், ஏட்டு ராமானுஜம் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்று காலை 3 பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனுக்கு சொந்த ஊர் தேனி. சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். தேனியிலும், டி.பி.சத்திரத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியன் வீட்டில் இல்லை. மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு லட்சுமி மேற்பார்வையில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் குமரன், கஜேந்திரன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

இதே போல் விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு ராமானுஜம் வீட்டிலும், ஆவடி போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

ஏட்டு ராமானுஜத்தின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சிறுவை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனின் உறவினர் ஒருவரின் வீடு புதுவையில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, இன்று நடைபெற்ற சோதனையின்போது பெரும்பாலான இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏன்னென்ன ஆவணங்கள் என்பதை தெரிவிக்க இயலாது என்றார்.

லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.பி.சத்திரம், ஆவடி, விருகம்பாக்கம் போலீஸ் குடியிருப்புகளில் சோதனை காரணமாக பரபரப்பு நிலவியது.

ஆடு நனையுதென்று ஓ(நாய்) வேதனை!

அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஏன் சாதி சங்கமாக குறுக வேண்டும் எ‌ன்று பா.ம.க ‌நிலை கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி எழுந்து,நேற்று நடந்த விவாதம் குறித்து குறிப்பிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் பற்றி எதிர் கருத்துக்களை கூறினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ம.க உறுப்பினர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை பார்த்து பேச அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது அவை‌த் தலைவ‌ர், ஜி.கே.மணி காங்கிரஸ் உறுப்பினர்களை பற்றி கூறிய கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார். தான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினால் நேற்று சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜி.கே.மணி கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அ‌ல்போ‌ன்‌ஸ், சுதர்சனம் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று கூறினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியது ஜி.கே.மணியின் கருத்துக்கு மறுப்பு. இன்று ஜி.கே.மணி சொல்வது பிரச்சனையை உருவாக்கும் செயல். எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியது இல்லை என்றார்.

இதையடுத்து ஜி.கே.மணி நேற்று முதலமைச்சர் குறிப்பிட்டது போல அவர் விரும்புகிற நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை பற்றி விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

அ‌ப்போது முதலமைச்சர் கருணாநிதி குறு‌க்‌கி‌ட்டு பேசுகை‌யி‌‌ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சர் என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். ஒரு விவாதத்தை வைத்துக்கொள்ள தேதி சொல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டார். தி.மு.க. ஆட்சி வன்னியர்களுக்கு துரோகம் செய்வது போல ஒரு கற்பனை குற்றச்சா‌ற்றை கூறி அதுபற்றிய படிவங்களை அச்சிட்டு வெளியே வினியோகம் செய்து இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் மிகவும் பிற்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை எந்த அளவு வழங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்னிய சமுதாயத்தில் அதிகமாக இல்லை என்று கூறினார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதுபோல உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதும் தமிழக அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களை பொறுத்தவரை தற்போது வன்னியர்கள் இர‌ண்டு பே‌ர் இருக்கிறார்கள். ஜெயராமனுக்கு 2-வது முறையாக ஆட்சித்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் 3 பேர் வன்னியர்கள். அமைச்சர்களில் 3 பேர், துணைவேந்தர்களில் 3 பேர் வன்னியர்கள். தேர்வாணையத்தின் உறுப்பினர் தலைவராக வன்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை எல்லாம் நியமித்து இருக்கிறோமா? இல்லையா?

காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று இங்கு பேசும்போது மிகவும் கவலையுடன் குறிப்பிட்டார்கள். சாதி பற்றி ஒவ்வொருவரும் பேசும் நிலை ஏற்பட்டால் அதுபற்றிய பிரச்சனையை எழுப்பினால் என்ன ஆவது என்றனர். அந்த கவலையை நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றை குறிப்பிடுகிறேன். எந்த ஒரு தனிநபருக்கும், குழுவுக்கும் ஒரு கட்சியை உருவாக்க உரிமை உண்டு. அது சாதி கட்சியாக இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பா.ம.க. முதலில் சாதி சங்கமாக இருந்தது அப்போது எல்லாம் அவர்களுக்கு அரசியல் கட்சிகளை பிடிக்காது. என்னையும், சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இருக்கும் உங்களை போன்ற உறுப்பினர்களையும் ஓட்டு பொறுக்கி என்றுதான் சொல்வார்கள். அரசியலே பிடிக்காத அந்த சாதி சங்கம் பின்னர் அரசியல் கட்சியாக உருவாகியது. அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஏன் சாதி சங்கமாக குறுக வேண்டும் என்பதுதான் எனது வேதனை.

வன்னியர்களுக்கு இந்த கட்சி எதிரானது என்பது போல பொதுமக்களிடம் பிரசாரம் செய்கிறார்கள். 1969ஆம் ஆண்டில் என் தலைவர் அண்ணா மறைந்த போது நான் முதலமைச்சர் ஆனேன். அப்போதே நான் இதே அவையில் பிற்பட்டோர்களுக்கும், மிகவும் பிற்பட்டோர்களுக்கும் தொண்டனாக இருப்பேன் என்று கூறினேன். காரணம் நான் மிக மிக பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவன்.

1999இல் ஆளுநர் உரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் 108 பிரிவினர் இருப்பதாகவும், அவர்களது இடஒதுக்கீடு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாகவும் கூறப்பட்டது. ஜி.கே.மணி இங்கு பேசும் போது 108 சாதியினருக்கு 20 சதவீதம்தானா என்று பேசினார். இந்த 108 சாதியினரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரம் பேர்தான். இதில் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.

1957இல் முதன் முதலில் நான் சட்டமன்ற உறுப்பினராக இந்த அவைக்கு நுழைந்தபோது பெருந் தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்று இருந்த சமூகத்தினரின் பெயர் நாவிதர், மருத்துவர், இசை வேளாளர் என்று பல பெயர்களை குறிப்பிட்டு விட்டு இறுதியில் சானான் என்று போட்டு இருந்தார்கள். உடனே நான் எல்லோருக்கும் “ர்” விகுதியில் பெயர்களை குறிப்பிட்டு விட்டு ஒரு சமூகத்துக்கு மட்டும் ஏன் “ன்” விகுதியை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அந்த துறைக்கு அமைச்சராக இருந்த கக்கன் திடுக்கிட்டார். ஆனால் அமைச்சர் சி.சுப்பிரமணியன் அதில் தவறு இல்லை என்று வாதிட்டார்.

உடனே பெருந்தலைவர் காமராஜர், கக்கனிடம் ஏதோ சொல்ல அவர் திருத்தப்படும் என்று அறிவித்தார். இதில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது தெரியும்.

டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் வன்னியர்களை தி.மு.க. அரசு புறக்கணிப்பது போல கூறுகிறார்கள். மொத்தம் உள்ள பிற்பட்டோரில் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர். சேர்வை போன்ற சமூகத்தினர் 11 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர். மற்ற பிரிவினர் 41 லட்சத்து 81 ஆயிரத்து 11 பேர்.

இன்றைக்கு சமூகநீதி பற்றி பேசுகிற டாக்டர் ராமதாஸ் ஒரு திருமண விழாவில் தி.மு.க. வன்னியர்களுக்கு எதிரான கட்சி என்று பிரசாரம் செய்துள்ளார். சமூக நீதி தலைவரான வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் வன்னிய பெண்கள் வீட்டின் வாசலையும், ஜன்னலையும் பூட்டிக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறி இருந்தார். அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, சில செயல்களை செய்வதால்தான் இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்க ஜி.கே.மணி விரும்பினார். ஆனால் அவை‌த் தலைவ‌ர், முதலமைச்சர் தெளிவாக பதிலளித்த பின்னர் அவை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவது போல நின்று கொண்டிருப்பது முறையில்லை என்று கூறி அவரை உட்கார சொன்னார்.

ஆனால் ஜி.கே.மணியும், திருக்கச்சூர் ஆறுமுகமும், பா.ம.க உறுப்பினர்களும் சபையில் நின்று கொண்டே இருந்தனர்.
அப்போது அவை முன்னவர் அன்பழகன் குறுக்கிட்டு, ஒரு பிரச்சனையில் முதலமைச்சர் விளக்கமளித்த பிறகு அதில் விவாதத்திற்கு இடமில்லை. அதில் விவாதம் செய்ய உறுப்பினர்களுக்கு உரிமை கிடையாது.

ஜி.கே.மணி நேற்று எழுப்பிய பிரச்சனைக்கு இன்று முதலமைச்சர் விளக்கமளித்து விட்டார். முதலமைச்சருக்கே கூட அவை‌த் தலைவ‌ர் அனுமதி அளித்தால்தான் பேச முடியும். நேற்றும், இன்றும் இந்த பிரச்சனையை எடுத்துக் கொண்ட பிறகு இன்று மணி மீண்டும் அதனை எழுப்புவதற்கு அவையின் நேரத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. வேறொரு சந்தர்ப்பத்தில் பா.ம.க இந்த பிரச்சனையை எழுப்பலாம், பேசலாம்.

இங்கே ஜி.கே.மணியும் நீண்ட காலம் இருக்க போகிறார். நாங்களும் இருக்கப் போகிறோம். சமூக நீதி என்பது நீண்ட காலம் இருக்கும் பிரச்சனைதான். சமூகம் இருக்கும் வரை சமூக நீதி பிரச்சனையும் இருக்கும். எனவே வேறொரு சந்தரப்பத்தில் நீங்கள் பேசலாம் என்று கூறினார். அத்துடன் இந்த பிரச்சனை முடிவடைந்தது.

Tuesday, July 7, 2009

நிதிநிலை அறிக்கை - புதிய மொந்தையா?

ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தங்கள் ஆட்சியின் செயல்பாடு இருக்கும் என்று தேர்தல் அறிக்கையில் ‘ஆம் ஆத்மி’ (பொது ம‌க்க‌ள்) யைப் பற்றி கூறிவிட்டு, பட்ஜெட்டை பொருளாதார சீர்திருத்தக் கண்ணோட்டத்தோடு போடுவது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதியதல்ல.

அதைத்தான் 2009-10ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையிலும் செய்துள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும், விவசாயம் சா‌ர்ந்த கிராம மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்களுக்கு 3 ரூபாய்க்கு கிலோ அரிசி, கோதுமை, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தல், பொருளாதார ரீதியாக பிற்பட்ட குடும்ப மாணாக்கர்களுக்கு உயர் கல்விக் கடன் மீதான வட்டிக்கு மானியம், விவசாய கடன்களுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியாக நிர்ணயிப்பு, கிராமப்புற குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு என்ற பல அறிவிப்புகளை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

இவைகள் மட்டுமின்றி, உலகளாவிய பொருளாதார பின்னடைவு காரணமாக நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிதாக சாலைகள் அமைத்தல், விரிவு படுத்துதல், இரயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் விரிவாக்கம் ஆகிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 2014ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காடு செலவிடப்படும் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.54 இலட்சம் கோடி) என்ற அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி, நமது நாட்டில் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள் எண்ணிக்கையை 2014ஆம் ஆண்டிற்குள் பாதியாக குறைப்பது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது மக்கள் நலனை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையாகவே நம்மை ஒப்புக் கொள்ள வைக்கும் வகையில் உள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று இந்த நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்கத் துவங்கிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களையும் பட்டியலிட்டார்.

உலகப் பொருளாதாரப் பின்னடைவின் தாக்கம்!

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு நமது நாட்டின் பொருளாதாரத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நமது பொருளாதாரத்தை எதிர்நோக்கியுள்ள 3 சவால்களை (உரையின் பகுதிகள் 7, 8, 9) அமைச்சர் பிரணாப் பட்டியலிட்டுள்ளார்.

1) நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை) 9 விழுக்காடு அளவிற்கு வெகு விரைவில் எட்டுவது. வருவாய் வளர்ச்சி முக்கியம், அதே நேரத்தில் அது கொண்டு வரும் வள ஆதாரங்களும் முக்கியமானவை. இந்த வள ஆதாரங்களே நமது நாட்டின் மேம்பாட்டிற்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு - உதாரணமாக நமது மக்களின் பலவீனமான பகுதியினரின் நலன்களைப் பேணும் திட்டங்களை நிறைவேற்ற அவசியமாகும்.

2) இரண்டாவதாக ஒட்டு மொத்த, விரிவான வளர்ச்சி எனும் இலக்கை எட்டுவதற்கும், நமது நாட்டின் முன்னேற்றத்தின் பலன் எந்த ஒரு தனி மனிதனையோ அல்லது சமூகத்தையோ அல்லது பகுதியையோ சென்றடைவதை உறுதி செய்வது.

3) மூன்றாவதாக அரசு நிர்வாகத்திற்கு சக்தியூட்டி அதன் மூலம் திட்டங்களின் பலன்களை உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வது (இதுவரை சென்றடையவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறது அரசு). நமது அரசு நிறுவனங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த சேவைகளை அளிப்பதையும், பாதுகாப்பும், சட்டத்தின் ஆட்சியும் வெளிப்படையாக அனைவரையும் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

என்று மூன்று சவால்களையும், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் அளித்துள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த இலக்குகளை எட்டுவதற்கான அடிப்படையை (பகுதி 10) அடுத்துப் பேசினார். “கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழிவகுத்த வளர்ச்சிப் பாதையின் வெற்றிக்கு பொருளாதார வளர்ச்சி விகிதமும், வருவாய் அதிகரிப்பும்தான் காரணம். இந்த காலகட்டத்தில் நமது வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது தனியார் முதலீடே. இதில் உள்நாட்டு முதலீடே பெரும் பங்கு வகித்தது” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அந்நிய முதலீட்டின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்:

“அந்நிய முதலீடு வரவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது மிக முக்கியமானது, ஆயினும் அது நமது நாட்டின் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இல்லை என்றாலும், அது நமது பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவைகளுக்கான நிதி வளத்தை அளிப்பதாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மேற்கண்ட வலியுறுத்தல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைபிடித்துவரும் திறந்த பொருளாதாரக் கொள்கை, அரசின் பல்வேறு திட்டங்களில் தனியார் முதலீட்டிற்கும், அந்நிய நேரடி முதலீட்டிற்கு தற்பொழுதுள்ள தடைகளை முழுமையாக நீக்கி, அதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் அந்நிய நிறுவனங்கள் எவ்வித தடையுமின்றி ‘முழுச் சுதந்திரத்துடன்’ பங்கேற்க வழிவகை செய்யப்போகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

நமது நாட்டின் உள்கட்டமைப்பு (Infrastructure) மேம்பாட்டிற்கு தேவையான நிதியை திரட்டி நீண்ட கால அடிப்படையில் அப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனம் (India Infrastructure Finance Company Limited - IIFCL) உருவாக்கப்படும் என்பதையும், அதற்கு (நிதி தொடர்பான விதிமுறைகளில்) இருந்து அதிகபட்ச இணக்கம் காட்டப்படும் என்றும் (பகுதி 17) கூறியுள்ளார்.

இதுபற்றிக் குறிப்பிடும் போது அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார். அது ‘Takeout Financing’ என்பது. தொலைபேசி சேவை விரிவாக்கம், மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே கட்டமைப்பு போன்ற நிறைவேற்ற நீண்ட காலமாகும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நீண்ட கால (உதாரணம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான) கடன்களை வழங்குவதில் வங்கிகளுக்கு நிதிச் சிக்கல் (asset - liability mismatch) ஏற்படும் அபாயம் உள்ளது. அவைகள் குறைந்த கால அடிப்படையில்தான் அதிகமான வைப்பு நிதிகளை (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பெறுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தேவையான நீண்ட கால கடன்களை பெறுவதற்கே இந்த ‘Takeout Financing’ முறை கடைபிடிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு நீ்ண்ட காலத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக் கடன்களை வங்கிகள் அளிக்க முன்வரும். உதாரணமாக 10 ஆண்டுக்காலத் திட்டத்திற்கு முதல் 3.3 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியும், அடுத்த 3.3 ஆண்டுகளுக்கு மற்றொரு வங்கியும், இறுதி 3.4 ஆண்டுகளுக்கு மூன்றாவது வங்கியும் கடன் அளிக்கும். அப்படி கடனளிக்கும் வங்கிகளுக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் நிலையில், அரசு உருவாக்கும் இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனம் அந்த வங்கிகளுக்கு 60 விழுக்காடு வரை நிதியுதவி செய்யும்.

இதன் மூலம் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பொது - தனியார் கூட்டாண்மையில் (Public - Private Partnership - PPP) நிறைவேற்றப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நீண்ட காலக் கடன் அளிக்க வழிசெய்யப்படும் என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் 1 இலட்சம் கோடி நிதியுதவியை இந்திய வங்கிகளும் இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனமும் அளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இதற்கான நிதி முதலீட்டைப் பெருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் ‘தடையாக’ உள்ள கொள்கைகள், கட்டுப்பாடுகள், நிர்வாக ரீதியிலான நெருக்குதல்கள் ஆகியவற்றை ‘நீக்குமாறு’ மத்திய அரசு அமைச்சகங்களையும், மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது தனியார் மற்றும் அந்நிய முதலீட்டு வரத்திற்கு தடையாக உள்ள கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என்றும், முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு என்ற எதுவும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணய கொள்கையில் மாற்றம்!

இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை கைவிடுவது எனவும் அரசு முடிவு செய்துள்ளது இந்த நிதி நிலை அறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா விலையேற்றத்திற்கும், இறக்கத்திற்கும் தக்கவாறு பெட்ரோல், டீசல் விலைகளை கூட்டுவதோ குறைப்பதோ அரசின் முடிவாக இருந்த நிலை மாறி, இதற்குமேல் விலை நிர்ணய பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட அரசு முடிவு செய்திருப்பதையே பிரணாப்பின் நிதி நிலை அறிக்கை உரை (பகுதி 35) தெளிவாக்குகிறது.

“கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உள்ளதற்கு தக்கவாறே உள்ளூர் விலைகளை நிர்ணயிக்கும் வழிமுறை நமது அண்டை நாடுகளில் கூட நடைமுறையில் உள்ளது. நமது தேவைக்கான எரிபொருள் அளவில் முக்கால் மடங்கு இறக்குமதி செய்யும் நமது நாடும் இந்த வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலையேற்றத்திற்கும், இறக்கத்திற்கும் ஏற்றவாறு நிர்ணயிக்கும் ஒரு வழிமுறை குறித்து ஆலோசனை அளிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் தீர்வைகளும், வரிகளுமே பெரும் பங்கு என்றாலும், அது குறித்து எந்த பரிசீலனையும் செய்வது பற்றி உறுதியளிக்காமல் - அதாவது அரசு வருவாய் குறையாமல் - மொத்த சுமையையும் மக்கள் மீது ஏற்றுவதற்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்போகிறது அரசு!

நவரத்தினங்களும் தனியார் மயமாகும்!

பொது‌த் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்களுக்கு விற்று அதன் மூலம் அந்நிறுவனங்களை தனியார் கையில் முழுமையாக தாரை வார்க்கும் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை தனது உரையில் (பகுதி 37) பிரணாப் முகர்ஜி ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட வேண்டியிருந்ததால் மூலதன விலக்கலில் இருந்து தப்பித்த நவரத்தினங்கள் என்றைக்கப்படும் பாரத் மிகு மின் நிறுவனம் (Bharath Heavy Electricals limited _BHEL), இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited), இந்திய கப்பல் நிறுவனம் (Shipping Corporation of India), ஊரக மின்மயமாக்கு நிறுவனம் (Rural Electrification Corporation Limited), இந்திய எரிசக்தித் தொகுப்பு நிறுவனம் (Power Grid Corporation of India Limited), தேச அலுமினிய நிறுவனம் (National Aluminium corporation Limited), தேச மின்னனு நிறுவனம் (Bharath Electronics Limited), ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் (Hindustan Aeronautical Limited), தேச கனிம மேம்பாட்டு நிறுவனம் (NMDC Limited) ஆகிய மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் திறம்படவும், இலாபகரமாகவும் இயங்குவதனால் ‘நவரத்தினா’ நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சிறப்பாக இயங்கும் மத்திய அரசின் மற்ற பொதுத் துறை நிறுவனங்களும் இப்படியலில் சேர்க்கப்படுகின்றன (உதாரணம்: எரிசக்தி நிதியுதவிக் கழகம் - Power Finance corporation). இந்த நவரத்னா நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மாட்டோம் என்று மத்திய அரசு (நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மூலம்) உறுதியளித்தது. ஆனால் நேற்று நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் மட்டுமே (எதிர்காலத்தில் இவைகளும் மூலதன விலக்கலுக்கு உட்படுத்தப்படலாம்) பொதுத் துறையில் இருக்கும் என்றும், இவற்றின் வளர்ச்சிக்கு மூலதனம் அளிப்பது உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளையும் அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் நவரத்தினா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் கதி? அதனை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் பிரணாப் முகர்ஜி: “பொதுத் துறை நிறுவனங்கள் தேசத்தின் சொத்துக்களாகும். நமது (பொதுத் துறை) நிறுவனங்களில் உள்ள அரசின் மொத்த மூலதனத்தில் 51 விழுக்காடு அளவிற்கு அரசிடம் வைத்துக் கொண்டு, மீதமுள்ள பங்குகளை விற்கும் திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்கேற்பிற்கு ஊக்கமளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.ஆக நவரத்தினா, சிறு நவரத்தினா ஆகிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை பொது மக்கள் பங்கேற்பிற்கு என்று கூறி தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளதை பிரணாப் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் முதலீட்டின் காரணமாகவே 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு என்ற அளவிற்கு இருந்தது என்று ‘முதலீட்டிற்க்கான சூழல்’ என்ற தலைப்பில் (பகுதி 44) மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜி, தொழில் நிறுவனங்களின் குறைபாடுகளைத் தீர்க்க அவர்களோடு அரசு நெருங்கிச் செயல்படும் என்று கூறியுள்ளார்.

ஆக, தனியார் பங்கேற்பிற்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை திறந்து விடுவது மட்டுமின்றி, தனியார் முதலீட்டிற்கும், பங்கேற்பிற்கும் எந்த அளவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுமோ அதே அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகளுக்கும் முழு அளவிற்கு கதவு திறந்துவிடப்படும் என்பதே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தேச ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நாள் கூலி ரூ.20 உயர்த்தப்பட்டிருப்பது, பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்து மாணவர்களுக்கு உயர் கல்விக் கடன்களின் மீதான வட்டிக்கு மானியம், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3,25,000 கோடி இலக்கு, கல்விக்கான ஒதுக்கீட்டை மேலும் ரூ.2,000 கோடி அதிகரித்திருப்பது என்பது போன்ற அனைத்தும் எந்த விதத்திலும் மக்களை முழுமையாக சென்றடையாத அறிவிப்புக்களே.

மாணவர்கள் வங்கிகளில் கடன் பெறச் சென்றால் அதற்கு பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழிக்கும் வங்கிக் கிளைகள், ஏற்கனவே அளிக்கப்பட்ட கடனில் ஒரு பகுதியாவது திருப்பிச் செலுத்தினால்தான் மறு கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளிடம் வங்கிகள் போடும் நிபந்தனைகள், தேச ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாளுக்கு ரூ.80 பெற்ற கிராம மக்கள் மிகக் குறைவானவர்களே என்பதும், அதில் நடந்துள்ள ஊழலும், சராசரி பொருளாதார நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து வரும் மாணாக்கர்களுக்கு எட்டாத உயர் கல்விக்கும், ஐஐடி போன்ற உயர் தொழில் கல்விக்கும் மட்டுமே அதிகமான நிதி ஒதுக்கீடு என்பதும் நடைமுறையில் முழுமையான பலன் தேவைப்படும் மக்களுக்குச் சென்றடையாத திட்ட அறிவிப்புக்களே.

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று முன்பு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எந்த அறிக்கையையும் அவர் வைக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் நலத் திட்டங்களின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் யாருக்கும் பலனளிக்க வேண்டுமோ அவர்களைச் சென்றடைந்ததா என்பதை அறியும் வாய்ப்பற்ற நிலையில்தான் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில், பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் முழுமையாள தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தனியார் முதலீட்டிற்கும், ஆளுமைக்கும் வழியேற்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் வழி என்று கூறுகிறது மத்திய அரசு.

1992ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு கடைபிடித்து வரும் புதிய பொருளாதாரக் கொள்கையால் நமது நாட்டி‌ன் முன்னேற்றம் எந்தெந்த வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விவரமான ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தாராளமயமாக்கலும், தனியார் மயப்படுத்தலும்தான் வழி என்கிறது அரசு!அதன் இந்த இலட்சியத்தை இந்த நிதி நிலை அறிக்கையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வாழ்வு இப்படிப்பட்ட ‘சீர்த்திருத்தங்களால்’ வணிகமயமாகிறது என்பது அன்றி, பரவலான வளர்ச்சிக்கு வழியேற்படப்போவதில்லை.

Friday, July 3, 2009

தன்னிலை இழந்த தமிழினத் தலைவர்!

இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழரின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்வது குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை குறித்தும் விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்துள்ள ‘விரிவான’ பதில் தமிழனின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு தடம் மாறிப் போய்விட்டது என்பதற்குச் சான்றாகும்.

ஈழத் தமிழரின் பிரச்சனை (தான் ஆட்சியில் இருக்கும் போது) அரசியல் பிரச்சனை ஆவதையோ அல்லது தேர்தல் பிரச்சனை ஆவதையோ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்புவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்து உண்மையாகும்.

அதனால்தான் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியதும், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் 50 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டவர்கள் குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக-வும், மதிமுக-வும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொ்ண்டுவந்தபோது அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் வெளிநடப்பிற்கு வழி செய்தது ஆளும் கட்சி!

மறுநாள் அவர்கள் அப்பிரச்சனையை அவையில் பேசியபோதும், அதனைப் பெரிது படுத்தாமல் பதிலளித்து நீர்க்கச் செய்தது ஆளும் கட்சி. ஏனென்றால், இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட 16ஆம் தேதி மதியம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் பலம் பெற்றதற்குப் பிறகே ஈழத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையானது. நான்கு பக்கமும் சிறிலங்க இராணுவத்தின் பல படையணிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி. 2 கி.மீ. சுற்றளவு உள்ள பகுதியில் முடங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிக்கத் தொடங்கினர்.

அத்தாக்குதலின் உச்சக் கட்டமாக, மே 18ஆம் தேதி (திங்கட் கிழமை) பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அனைவரையும் கொன்று தீர்த்தது சிறிலங்க இராணுவம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையை நடத்தி முடித்த பிறகே போர் முடிந்தது என்று இராணுவம் அறிவித்தது. மறுநாள் போர் முடிந்ததை சிறிலங்க அதிபர் ராஜபக்ச அறிவித்தார்.

இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட விவரம் அறிந்த உலக நாடுகள் சிறிலங்க அரசைக் கண்டித்தன. “மக்கள் வாழ்ந்த தடமே அங்கு இல்லை, அந்த இடமே அச்சமூட்டுவதாக இருந்தது” என்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பொதுச் செயலரின் முதன்மை அலுவலர் விஜய் நம்பியாரும், பிறகு பொதுச் செயலர் பான் கீ மூனும் கூறினர். அது குறித்து சர்வதேச குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று பான் கீ மூனும், மற்ற உலக நாடுகளும் ராஜபக்சேவை வற்புறுத்தின.

ஆனால், தாய் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.கருணாநிதி இது குறித்து சற்றும் ‘அறியாதவராய்’ டெல்லியில் முகாமடித்து தனது கட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திய அமைச்சர் பதவிகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து, அந்தத் தொப்புள் கொடி உறவுகள் ஆறே முக்கால் கோடிப் பேர் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கவலைப்படாதவராகவே இருந்தார். அது குறித்து இன்று வரை அவர் பேசவில்லை!

ஒரு பிரச்சனை குறித்து ‘பேசாமல் இருந்தாலே அது செத்துவிடும்’ என்பதை அறியாதவரா அனுபவம் மிக்க நமது அரசியல் தலைவர்? அதனால்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த மாபெரும் படுகொலை குறித்து வற்புறுத்தி வரும் நிலையிலும் இன்றுவரை கருணாநிதி அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் மெளனம் சாதிக்கிறார் என்றால் எப்படிப்பட்ட அரசியல் சாதுரியம்?

உறுப்பினர்களின் பேச்சும் முதல்வர் அளித்த பதிலும்!

“ஆடு மாடுகளைக் கூட வேலி போட்டு அடைத்து வைப்பதில்லை, ஆனால் அங்கே மனிதர்களை முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருந்தும் உதவி செய்ய முடியாதவர்களாக கைகள் கட்டப்பட்டுள்ளோம்” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் பேசுகிறார்.

“போர் முடிந்த பின்னும் எஞ்சியுள்ள தமிழர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது கண்கள் குளமாகின்றன. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டாந்தரையில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கு சம உரிமையும், வாழ்வையும் பெற்றுத் தரவேண்டும், அவர்கள் எங்கு வாழ்ந்தார்களோ அதே இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டு்ம். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது” என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறார்.

“முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்றுள்ள நிலையில் குறைந்த பட்ச சுயாட்சி உரிமையை பெற்றுத் தர வேண்டும்” என்று பா.ம.க. சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கோ.க. மணி பேசிகிறார்.

“உயிரோடு மிச்சமிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமிருக்கின்ற தமிழர்களாவது மானத்தோடு வாழ வேண்டும். பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு உரிய நிவாரணம் சென்று சேர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் இராமசாமி பேசுகிறார்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் நேரடியான எந்தப் பதிலும் தெரிவிக்காமல், “அங்குள்ள தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை சிங்கள அரசுதான் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசு இது குறித்து வற்புறுத்தத்தான் முடியும்” என்று முதல்வர் பதில் கூறுகிறார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சரின் பதிலை ஏதோ இவர் அடிப்படை இன்றி அளித்த பதிலாக புரிந்துகொண்டால் ஏமாந்து விடுவோம். இந்த தலைவர் பயன்படுத்திய இதே வார்த்தையைத்தான், அயலுறவுச் செயலரான சிவ்சங்கர் மேனன் கொழும்புவிலும், பிறகு டெல்லியிலும் கூறினார். “என்ன செய்ய வேண்டும் என்பதை சிறிலங்க அரசிற்கு நாங்கள் எதையும் சொல்லப் போவதில்லை. அவர்களின் நாடு, அதைச் செய், இதைச் செய் என்று நாங்கள் எதையும் அவர்களிடம் கூறிட முடியாது” என்று கூறினார். இதைத்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக-வின் தலைவரான கருணாநிதி தமிழக சட்டப் பேரவயையில் பதிலாக கூறியுள்ளார்!

நாம் எதையாவது பேசி சிங்களவர்களின் கோபத்தை கிளிறிவிடக் கூடாது என்றும் ஆலோசனை கூறியுள்ளார் தமிழக முதல்வர்!

“இங்கு நாம் வீரவேசமாகப் பேசலாம், சூறாவளிப் பேச்சு, புயல் வேகப் பேச்சு என்று பேசி அதற்காக புகழாரம் சூட்டலாம். தமிழ் மக்களைக் காப்பாற்ற அது உதவாது, மாறாக சிங்களர்களின் கோபத்தைத்தான் அது அதிகரிக்கும்” என்று தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிட இயக்கத்தின் அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கருணாநிதி ஆலோசனை கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், பெரியார், அண்ணா வழியில் இயக்கத்தையும், அரசியலையும் நடத்திய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதியிடம் நாம் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்:

1) தமிழர்கள் தங்களுக்கு அரசமைப்பு ரீதியாக சம உரிமை கோரி சாத்வீக வழியில்தானே போராட்டத்தை துவக்கினார்கள்? அதற்கே சிங்களவனுக்கு கோபம் வந்ததே? அதனால்தானே ஈழத் தந்தை செல்வாவையும், அவருடன் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த மற்ற தலைவர்களையும் சிங்கள காவல் துறையும், சிங்கள காடையர்களும் அடித்து உதைத்தனர்? அப்படியானால், அவர்களுக்கு கோபம் வரும் வகையில் போராடியது செல்வா செய்த தவறா?

2) செல்வாவின் போராட்டத்தையே ஒடுக்கியதால்தானே பின்னாளில் ஆயுத போராட்டம் உருவானது? அதனால் சிங்களர்களுக்கு ஏற்பட்ட கோபம்தானே 1983இல் வெடித்த இனப் படுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை கொல்லப்பட்டது சிங்களர்கள் கோபமுற்றதால்தானே? அவர்களிடம் ஏன் இந்த ஆலோசனையை அன்றே சொல்லவில்லை?

3) கால் நூற்றாண்டிற்கும் மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது மட்டுமின்றி, உங்களது பிறந்த நாளில் வசூலான பணத்தை எல்லா ஆயுதமேந்திய இயக்க்களுக்கும் தலா ரூ.50,000 வீதம் பிரித்துக் கொடுத்தீரே, அது எதற்காக?

கச்சத் தீவிற்கும் இது பொருந்துமா?

இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது தெரியும். ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியானால் வேறு பேச்சு என்பது உங்களை அறிந்த தொண்டர்களுக்கே தெரியும்.
ஆயினும் நமது மற்றொரு கேள்வி இதுதான்:

கச்சத்தீவை மீட்க அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினீர்களே? இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை நாம் மீண்டும் கேட்டால் சிங்களவர்களுக்கு கோபம் வராதா? அங்கே சென்று மீன் பிடித்தாலே சுடுகிறானே சிங்களவன்? அந்தத் தீவை திருப்பிக் கொடடா என்று கேட்டால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? அதனால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுவார்களே? என்ன செய்வீர்கள்?

நமது ‘மீனவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க’ கச்சத் தீவும் வேண்டாம், அந்த கடற்பரப்பில் நாம் சென்று மீன் பிடிக்கவும் வேண்டாம் என்று கூறுவீர்களா முதல்வர் அவர்களே?

இதேபோல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் கேரள அரசிற்கும், அதன் தலைவர்களுக்கும் அடிக்கடி கோபம் வருகிறதே, அந்த அணையை இடித்துவிட ஒப்புக் கொள்வீர்களா?

பாலாற்றுப் பிரச்சனையிலும் உங்களின் அரசு இந்தப் புதிய பாதையில்தான் சென்றுதான் ‘தீர்வு’ காணுமா?

ஆனால் அங்கே தமிழர்களுக்கு மாநில சுயாட்சியாவை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிற நீங்கள், அதே கோரிக்கையை சமீபத்தில் எழுப்பினீர்கள், அது சோனியாவை கோபப்படுத்தினால் விட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாம் நீங்கள் பதில் கூறவேண்டும். அப்போதுதான் உங்களிடம் எதை எதிர்ப்பார்க்கலாம் என்பது தமிழக மக்களுக்குப் புரியும்.

பெரியார் காட்டிய வழியா இது?

ஆட்சியும், அதிகாரமும், பதவியும் ஒரு மனிதனை மாற்றும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஒரு தலைவனை இந்த ‘அளவிற்கு’ மாற்றும் என்று இன்றுதான் தெரிகிறது.

சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், தமிழரின் உரிமைக்காக சமூக, அரசியல் தளங்களில் கடுமையாக போராடினார். அதன் விளைவாகவே இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுற்கு வழிகாணப்பட்டது. தமிழரின் மொழிக்கு உரிய இடம் கிடைத்தது.

மானமும், அறிவும் மாந்தரின் அடையாளம் என்றார் பெரியார். அப்படியே நின்றார், போராடினார், வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் வழி வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் - விதிவிலக்கில்லாமல் அனைவரும் - பெரியார் ஊட்டிய அறிவையும், தமிழரின் மானத்தையும் அடக்கு வைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை சிங்களவன் நன்கு உணர்ந்துள்ளான். அதனால்தான் கூறினான் “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கோமாளிகள்” என்று.