Sunday, February 21, 2010

நடக்கப்போவது என்ன? பென்னாகரம் தொகுதியில் சுறுசுறுப்பு

பென்னாகரம் இடைத்தேர்தல் தேதி ஏற்கனவே ஒரு முறை அறிவித்தபோதே, தி.மு.க., - பா.ம.க.,வினர், முழு வீச்சில் தேர்தல் பணியை துவங்கி விட்டனர். இடையில், லேசான தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 27ம் தேதி பென்னாகரம் இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் தேர்தல் பணிகளில் பா.ம.க., - தி.மு.க.,வினர் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் பணி குறித்தும், வரும் நாட்களில் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு போலீசில் முன் அனுமதி பெறுவது குறித்தும் அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, பணிகளை கவனிக்கத் துவங்கி விட்டனர். அதேபோல, சென்னை பொதுக்குழுவுக்கு சென்று திரும்பிய தி.மு.க.,வினரும், முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.தேர்தல் அறிவித்து, ஒத்தி வைக்கப்பட்ட கால அவகாசத்தில், பல்வேறு பின்தங்கிய கிராமங்களில் சாலை, பஸ், குடிநீர் வசதியை, ஆளுங்கட்சியினர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி செய்து கொடுத்துள்ளனர். பா.ம.க.,வினர் தங்களது ஜாதிப் பின்னணியை பயன்படுத்தி, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர்.இதனால், பென்னாகரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க., மட்டுமே மோதுவது போன்ற ஒரு தோற்றம், வாக்காளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளின் நிலை மோசமாக உள்ளது. சுவர் விளம்பரங்கள் எழுதக்கூட அவர்களுக்கு இடமில்லாத அளவுக்கு, தி.மு.க.,வும், பா.ம.க.,வும் ஆக்கிரமித்து விட்டன; இரவு, பகலாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.

குழப்பம்: அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி மாவட்ட செயலர் தாளப்பள்ளம் அன்பழகன் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வில் டாக்டர் செந்தில் உள்ளிட்ட ஐந்து பேர், கட்சித் தலைமையிடம் "சீட்' கேட்டுள்ளனர். தலைமையின் முடிவு தெளிவில்லாமல் இருப்பதால், அக்கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் சார்பில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவர் என்று கூறப்படுகிறது. அந்த அறிவிப்பும் வந்தால், தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படையும்.

சமீபத்தில் டில்லி சென்று திரும்பிய ஜெயலலிதா, "பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடும்' என அறிவித்தார். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் 43 ஆயிரம் வாக்காளர்கள் விடுபட்டிருப்பதாக புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதியை மே மாதம் வரையில் தள்ளிப் போட வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க., எண்ணியது. இந்நிலையில் திடீர் தேர்தல் அறிவிப்பு, அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் இறங்கியிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்ட போதும், இவ்விரு கட்சியும் வேட்பாளர் தேர்வு பற்றி அதிக பரபரப்பு காட்டாதது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற கட்சியினரும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளனர்.

எது எப்படியிருந்தாலும் நடக்கப்போவதை நாடறியும்!!!

Monday, February 8, 2010

திருட்டு விசிடி-க்கு ஆப்பு வைக்கும் யோசனைகள் சில...

நாட்டுப்புறக் கலைகள் மட்டுமே இருந்த காலத்தில் திரைப்படம் வந்தபோது, நமது கிராமியக் கலைகள் பாதிக்கப்படத்தான் செய்தன. பிறகு வானொலி, பிறகு தொலைக்காட்சி வந்தபோது திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன. இப்போது அதைவிட நவீனமாக இணையதளங்கள் வந்துவிட்டன. இணைய தளங்களில் வீட்டில் இருந்தபடியே புத்தம்புது திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துவிடலாம். வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். இதுவும் ஒருவகையில் முறைகேடானதே.

விசிஆர் வந்தபோதும் பல புதிய திரைப்படங்கள் கடைகளில் வாடகைக்கு கிடைக்கத்தான் செய்தன. பின்னர் விசிடி இப்போது டிவிடி. உரிமை மீறல் குற்றங்களுக்காக அந்த காலத்திலிருந்தே பல கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, பல திருட்டு விடீயோ காஸட்டுகளையும், இப்போது பல திருட்டு விசிடி-களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

எந்தவொரு புதிய ஊடகம் வந்தாலும், அதற்கு முந்தைய ஊடகத்திற்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இதை தவிர்க்க முடியாது. நாட்டில் யாருமே டிவிடி-களையோ, விசிடி-களையோ பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க முடியுமா என்ன? உரிமை மீறலை தடுப்பதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது.

திரைப்படம் வெளியாகும்போதே அதன் டிவிடி-களையும் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடவேண்டும். அதேபோல புத்தம்புது திரைப்படங்களையும் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்று வகை செய்யவேண்டும். இப்படிச் செய்தால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திருட்டு விசிடி-கள் அல்லது திருட்டு பதிவிறக்கம் மூலம் இழப்பு ஏற்படாது. இதைவிட்டு விட்டு அங்கொன்றும்-இங்கொன்றுமாக திருட்டு விசிடி-க்களை பறிமுதல் செய்துவிடுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை.

திருட்டு விசிடி-க்களை விற்பவர்களை பொறுத்தவரையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படம் அவர்கள் கைக்கு எப்படி போகிறது என்பதை பார்க்கவேண்டும். அவர்களுக்கு படத் தயாரிப்புச் செலவு இல்லை. ஆக மிகக் குறைந்த லாபம் கிடைத்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் இழப்பு முழுவதையும் ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆக திரைப்படம் வெளியிடும்போதே விசிடி உரிமைகளையும் விற்பனை செய்து, விசிடி-க்களையும் திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதுதான் புத்திசாலித்தனம்.

Wednesday, February 3, 2010

வலையுலகப் படைப்பாளிகள்!

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.

நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.

இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இது தினமணியில் வெளியான கட்டுரை!