தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இதை தெரிவித்தார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திரத்தில் பற்றி எரியும் தெலங்கானா நெருப்பை அணைக்கும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனி மாநிலம் அமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தெலங்கானா போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில முதல்வர் ரோசய்யாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
மாணவர்களும் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சந்திரசேகர ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியது.
தெலங்கானா பகுதி எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறினர். தெலங்கானா போராட்டம் ஆந்திரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் பிரதமர்.
மத்திய அரசின் முடிவை அடுத்து தெலங்கானா தனி மாநிலம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் கைவிடப்படும் என்று தெரிகிறது.
உண்ணாவிரதம் வாபஸ்
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் புதன்கிழமை நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் முடிவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதற்காக தில்லியிலிருந்து புதன்கிழமை இரவே ஆந்திர முதல்வர் ரோசய்யா ஹைதராபாத் திரும்பினார்.நீண்ட நாள்களாக உள்ள தெலங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற சந்திரசேகர ராவின் உண்ணாவிரதப் போராட்டம் அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதாது"
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் கூறினார்.
Wednesday, December 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment