Tuesday, January 12, 2010

பொங்காத பொங்கல்!

பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்
பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்
இந்நாள்

பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்
எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே
வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்
தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?
காய்கறி விலையோ கைக்குள் இல்லை
வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்
வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்

ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்
அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்
எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்
எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்
காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி
தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்

தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை
தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை
தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை
தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்
தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு
குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை
"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது

கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்
கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்
நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்
வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி
மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே
வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி
நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த
கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!

அதுதமிழை மிதிக்கும் ஆங்கிலத்தில் மிதக்கும்
தமிழாய்ந்த தமிழன் பெயர்த்தொலைக் காட்சியில்
உமிழத்தகும் காட்சிகள் உலாவரும் ஆட்சி
பணம்பண்ண வந்தால் பண்பாடா தமிழா
பணப்பண் பாடலே பண்பாடா குமென்பர்
மானோடக் கண்டுளேன் மானாடக் கண்டிலேன்
மானாட மயிலாடக் காண விரும்பின்
கலைஞர் தொ.கா.வில் கண்கூசக் காணலாம்
கலைபண் பாடுஇவை களைந்தமிழில் காணின்
நிலைஉளத்தர் நிலைகுலைவர் நிலைத்த உண்மையாம்
என்னைச் சில்லோர் இதுகாண்க என்றனர்
கண்களை உறுத்தின கவன்று நிறுத்தினேன்

எம்மொழி எம்மினம் எப்படி அழிந்திடினும்
செம்மொழி மாநாடெனச் சித்து விளையாடலாம்
இந்தியும் இத்தாலியும் ஈழ மக்களைக்
கொந்திக் குதறிய கொலைவன் கொடுமையைச்
சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பினில்
நட்டபட்டு நடிக்கலாம் நாட்டு மக்களைத்
திட்டமிட்டுத் திசைதிருப் பலாம்ஈழ மக்களை
வட்டமிட்டு வளைத்துக் கொத்துக் குண்டுகளால்
சுட்டுத் தீய்த்த சொல்லொணாக் கொடுமையைத்
தொட்டவர் உள்ளமெலாம் துமிக்கிக் குண்டுகள்

முள்ளி வாய்க்காலில் முடிந்தது தொடக்கமே
முள்ளி வாய்க்கால் முழுமூடச் சிங்களர்க்குக்
கொள்ளி வாய்க்கால் கூடிய விரைவில்
உள்ளம் உள்ளவர் உள்ளம் வேகுமே
முள்வேலிக் குள்ளே முடங்கிப் புழுங்கி
உள்ளோம் உள்ளம் உலைக்கலம் ஒக்குமே
நூறா யிரவரை நூழிலாட் டியவனை
சீறிச் சீரழிக்கும் செய்கை தேர்வர்

எல்லாளன் நாட்டின் எழிலுரு அழித்த
பொல்லா இந்தியும் இத்தாலியும் பொசுங்கும்
எல்லா இழப்புக்கும் கையொடு கைகோர்த்த
நல்ல நடப்பிலா நயவஞ்சர் நைந்த‌‌ழிவர்
ஈழ விடியலில் எழிந்திடும் தமிழகம்
வேழம் நிகர்த்த வெல்மறவர் களங்காண்பர்
பொய்யிலாப் புலவன்யான் புகன்றவை யெல்லாம்
பொய்த்தல் இல்லை புவியுளீர் காண்பீர்

நன்றி: புலவர் கி.த.பச்சையப்பன்
http://tamil.webdunia.com/miscellaneous/special/pongal/1001/12/1100112082_1.htm

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment