Wednesday, October 7, 2009

தப்பான தாளங்கள் - சிறுகதை

பச்சை பசேல் நிலச் சதுக்கம், மத்தியில் சிறந்த கட்டடக் கலை நுணுக்கங்களைப் பின்பற்றி கட்டிய கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் தன் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவன். அவன் அப்பா, அமெரிக்காவிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார்.

"ஆதவா என் நண்பன் சேஷூவின் மகன் பாரதி பணி நிமித்தமாக சென்னை வருகிறான். நட்பு ரீதியாக அவனைச் சந்தித்து, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்" என்று எழுதியிருந்தார்.

அவர் சொன்ன தேதியில், ஆதவனும் பாரதியைப் பார்க்க 'கொரொல்லோவில்' ஏறிப் புறப்பட்டான். தனக்குப் பிரியமான இசையைக் கேட்டுக்கொண்டே பயணித்ததில் தூரமே தெரியவில்லை அவனுக்கு. அந்த வீட்டு வாசலில் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினான். கதவு லேசாக திறந்தது. ஓர் இளம் பெண் எட்டிப் பார்த்தாள், அவளது பாதி முகமும், சுருண்ட கூந்தலும் தான் தெரிந்தது. கண்களாலே கபடி விளையாடினாள். என்ன? என்பது போல் பார்வையாலேயே கேட்டாள்.. ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை... வியர்த்துப் போனான்.. அலுவலகத்தில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் அதட்டுபவனுக்கு வார்த்தை வெளியே வராமல் தவித்தான். அவள் அழகில் மூர்ச்சையுற்றான். சுதாரித்துக்கொண்டு "பா.......ர.....தி" என்று இழுத்தான்.

மறுபடியும் அவள் கண்களாலேயே மேலே என்று புருவத்தை உயர்த்திப் பதில் கூறிவிட்டு, கதவை அறைந்து சாத்தினாள். மேலே சென்று பாரதியுடன் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் மட்டும் கீழேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. யார் அந்தப் பெண், கதவோரத்தில் வெண்ணிலாவாய். எப்படி அவளைக் காண்பது, அவளிடம் பேசுவது... இருப்புக் கொள்ளாமல் தவித்தான் ஆதவன்...

அன்று முதல் காலை நடைப் பயணம், மாலை நடைப் பயணம், மதிய உணவு என எல்லாம் அந்தக் குடியிருப்பைச் சுற்றியே அமைத்துக்கொண்டான். எந்த வேளையில் அவள் வெளியில் வருவாளோ...! எப்படியாவது அவளிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தான். அவளது பாதி தெரிந்த முகமே இவ்வளவு அழகென்றால்.. என்று நினைக்கும்போதெல்லாம், உடம்பில் ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது. அவனது நெடுநாள் தவத்திற்கு அன்று பலன் கிடைத்தது. பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி புவனேஷ்வரி அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். மிதிவண்டி எடுத்துக்கொண்டு தெருவில் ஓட்டலானாள். மெல்ல அவளருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான்.

புவனேஷ்வரி சிரித்துக்கொண்டே அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். உள்ளே செல்லும் போதே 'மம்மி யாரோ ஒரு அங்கிள் வந்திருக்காங்க' என்று அழைத்தாள். ஆதவனும் சரி அந்தப் பெண்ணின் அம்மாவிடமே விஷயத்தைச் சொல்லிச் சம்மதம் பெறுவோம் என்று தயாரானான். ஓர் அறையிலிருந்து கதவை மெல்லத் திறந்துக்கொண்டு அதே போல் அவள் பாதிமுகம் தெரிய எட்டிப் பார்த்தாள். அந்த பட்டாம்பூச்சிக் கண்களைக் கண்ட ஆதவன், தன்னை மறந்து விண்ணில் பறந்தான். அவள் மெல்ல அருகில் வர ஆரம்பித்தாள். உட்காரும் படி கண்களாலேயே சைகை காட்டினாள்.

நாற்காலியில் அமரும் வேளையில் எதிரே சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். புகைப்படத்தில் அந்தப் பெண், அந்தச் புவனேஷ்வரி, ஓர் ஆண் என்று குடும்பமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு, அந்த வெண்ணிலாவுக்கு உரிய சூரியன் அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆண் என்று.

"ஐயோ அவள் திருமணமானவளா? அந்தச் புவனேஷ்வரி அவள் மகளா? சே! எப்படி எப்படி தவறு செய்தேன்? பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்பவரைப் பைத்தியக்காரர்கள் என்று ஏளனம் செய்யும் நானா இந்த மாதிரி விழுந்துவிட்டேன்? அழகானவள் என்றாலே அவள் திருமணம் ஆகாதவளாய்த்தான் இருக்க வேண்டுமா? என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

இப்பொழுது அவளிடம் என்ன சொல்வது, என்று விழித்தான். அவள் அருகில் வந்து "யார் நீங்க? என்ன வேணும்?" என்று வினவினாள்

ஆதவன் சுதாரித்துக்கொண்டு "மேல் வீட்டுப் பாரதியின் நண்பன் நான். அவன் வீட்டில் இல்லை போல. அவன் வந்தால் ஆதவன் வந்து சென்றான் என்று சொல்லி விடுங்கள்" என்று கூறினான். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்று சொன்னாள். அவன் மனமொடிந்து எழுந்து சென்றான்.

புவனேஷ்வரி ஓடிவந்து அந்த பெண்ணைப் பார்த்து, "அக்கா யாரந்த அங்கிள்?, நம்ம அண்ணாவோட ஃப்ரெண்டா? என்று அந்தப் படத்தில் உள்ள தங்கள் அண்ணனைக் காட்டி கேட்டாள்.

No comments:

Post a Comment